ஏம்ப்பா "பீட்டா"... கேஎப்சியில் கோழிக்கறி விற்பதை எதிர்த்து ஏன் நீங்க போராடவே இல்லை?
சென்னை: காளைகளை வதைக்கிறார்கள், கடிக்கிறார்கள், வாலைப் பிடித்து முறுக்குகிறார்கள், மது கொடுக்கிறார்கள், ஊசி போடுகிறார்கள்.. அதுக்கு வலிக்குமே.. இது பீட்டா எனப்படும் விலங்கு வதைக்கு எதிரான அமைப்பினரின் வாதம். ஆனால் பீட்டா மற்றும் பிராணிகள் நல வாரியம் காளைகளை மட்டுமே குறி வைத்து தொடர்ந்து இயங்குவதும், பிற பிராணி வதை குறித்து இவை வாயே திறக்காமல் இருப்பதுதான் புரியாத புதிராக உள்ளது.
அட காளைகளை மட்டும்தான் நம்ம நாட்டில் வதைக்கிறார்கள் போல மக்களுக்கே சந்தேகம் வரும் அளவுக்கு இந்த ஜல்லிக்கட்டுக்குப் பின்னாலேயே சில வருடங்களாக இந்த பீட்டா திரிந்து கொண்டிருக்கிறது. அவர்களை அப்படி வால் முறுக்கி பின்னாலேயே போகச் சொல்லி யார் உத்தரவிட்டார்களோ என்னவோ தெரியவில்லை..!
ஆனால் அவர்களது கண்ணுக்கு மற்ற பிராணி வதை எதுவுமே தெரியாமல் போனதுதான் பெரிய ஆச்சரியம் + பேரதிர்ச்சியாக உள்ளது. அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டது பீட்டா. இந்தியாவில் இதன் செயல்பாடுகள் இவ்வளவு தீவிரமாக, அதாவது ஜல்லிக்கட்டுக்கு எதிராக படு தீவிரமாக அது செயல்படுவதுதான் ஆச்சரியமாக உள்ளது, சந்தேகத்தையும் கிளப்புவதாக உள்ளது.
பீட்டாவின் கண்ணில் இதுவரை படாமல் இருந்து வரும் பிராணி வதை என்று பார்த்து லிஸ்ட் போட்டால் மிகப் பெரிதாக இருக்கிறது.. அதாவது ஜல்லிக்கட்டைத் தவிர தற்போதைக்கு அவர்களின் கண்ணில் வேறு எந்த பிராணி வதையும் தெரியவில்லை என்பதுதான் அதில் முக்கியமானது.
ஊர் முழுக்க கிளை பரப்பி கோழியை விதம் விதமாக வெட்டிக் குத்திக் குதறி மசாலா போட்டு விற்று வரும் அமெரி்க்காவின் கேஎப்சிக்கு எதிராக ஒரு போராட்டப் புண்ணாக்கைக் கூட இந்த பீட்டா நடத்தியதில்லை.
கோழி கழுத்தை படக்கென திருகி, அப்படியே டிரம்முக்குள் போட்டு அது துடிதுடிக்க செத்த பின்னர் அதன் தோலை உரித்து கறி வெட்டி விற்கும் இறைச்சிக் கடைகளுக்கு எதிராக இவர்கள் ஒரு முறை கூட உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியதில்லை.
ஆட்டுக்கறி, மாட்டுக்கறிக்கு எதிராகவும் இவர்கள் போராடியதில்லை. கசாப்புக் கடைகளுக்கு எதிராக இவர்கள் இதுவரை போராட்டமே நடத்தியதில்லை என்பதே உண்மை.
பிராய்லர் கோழிகளுக்கு ஊசி போட்டு ஊட்டம் தருவதை எதிர்த்து இவர்கள் இதுவரை வாயைத் திறந்ததே இல்லை.
இந்தியாவின் பல ஊர்களில் யானைகள் படும் அவலத்தை இவர்கள் கண்டு கொண்டதே இல்லை. குறிப்பாக கோவில் யானைகள் படும் கஷ்டத்தைப் பற்றி இவர்கள் கண்ணீர் விட்டதே இல்லை.
ரேக்ளா ரேஸ் குறித்து வருத்தப்படும் இவர்கள், கேரளாவில் யானைகள் ரேஸ் நடக்கிறது. அதைப் பற்றி இவர்கள் கண்டு கொண்டதே இல்லை.
தெரு நாய்களைப் பிடித்துக் கொல்வது குறித்து இவர்கள் பெரிதாக அலட்டிக் கொண்டதே இல்லை. அதேபோல பணக்காரர்கள் வீடுகளி்ல் வளர்க்கும் உயர் ரக வெளிநாட்டு நாய்களை வீட்டுக்குள்ளேயே அடைத்து வைத்திருப்பது குறித்தும் அலட்டிக் கொண்டதில்லை.
வெளிநாட்டு நாய்களுக்கு கருத்தடை என்ற பெயரில் செய்யப்படும் சித்திரவதை குறித்தும் இவர்கள் கண்டு கொண்டதில்லை. நாய்களை சங்கிலி போட்டுக் கட்டி வைப்பதால் அவற்றின் கழுத்து வலிக்கும் என்று இவர்கள் யோசித்ததே கிடையாது.
பீட்டாவுக்கு லாப நோக்கிலானவை மட்டுமே கண்ணில் தெரியும். ஜல்லிக்கட்டை மட்டும் இவர்கள் துரத்தித் துரத்தி வருவதைப் பார்க்கும்போது சிலர் கூறுவது போல இதில் ஏதோ ஒரு பின்னணி இருப்பதாகவே தெரிகிறது. காரணம், பீட்டா பாரபட்சமில்லாமல் பிராணி வதை தொடர்பாக போராட்டம் நடத்தியதில்லை, குரல் கொடுத்ததில்லை என்பதால்.
பீட்டா இப்படி செயல்படுகிறது என்றால் மறுபக்கம் தமிழகத்தின் கட்சிகளும் கூட அரசியல் ரீதியாகவே இதைப் பார்த்து செயல்பட்டு வருவதாதன் வேதனையிலும் பெரும் வேதனை. இதை தமிழ்நாட்டின் கலாச்சாரம் என்ற பார்வையில் ஒரு கட்சி கூட பார்க்கவில்லை. மாறாக இது ஒரு வழக்கு என்ற ரீதியில் மட்டுமே தமிழக கட்சிகள் பார்க்கிறார்கள், அணுகுகிறார்கள்.
நமது அடையாளத்தில் ஒன்று பறி போய் விட்டதே என்ற பதைபதைப்பு கட்சிகளுக்கு இல்லாமல் போய் விட்டது. மொத்தமாக சேர்ந்து போராடும் எண்ணம் அரசியல் கட்சிகளுக்கு வராம் போனது வருத்தத்திற்குரியது.
இத்தனை காலமாக தமது சுற்றுலா விளம்பரங்களில் தமிழகத்தின் பிரபலமான அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு என்று போட்டு வெளிநாட்டினரை வரவழைத்து காசு பார்தது சந்தோஷப்பட்டதை மத்திய அரசும் சரி, மா்நில அரசும் சரி மறந்து போய் விட்டன.
நாளை செட்டிநாடு உணவில் மசாலா அதிகம். அது உடம்புக்கு ஒத்துக்காது என்று கூறி யாராவது கிளம்பி வருவார்கள்.. உடனே செட்டிநாடு உணவுக்கு தடை விதிக்கப்படலாம். அதையும் தமிழக மக்கள் வேடிக்கை பார்க்கும் நிலை வரலாம்.. அரசுகள் உறுதிபட செயல்படாவிட்டால்.
தமிழ், தமிழ்க் கலாச்சாரம், தமிழ் வீரம் என்றெல்லாம் வசனம் பேசிக் கொண்டு வேட்டியும் சட்டையுமாக உலவி வரும் தமிழக அரசியல்வாதிகள் யாருமே இந்தக் கலாச்சார அடையாளத்தைக் காக்க ஆக்கப்பூர்வமாக, ஒற்றுமையாக செயல்படாமல் போனது தமிழக மக்களின் தலை எழுத்து என்பதைத் தவிர வேறு எதுவுமே இல்லை.
நீதித்துறையையும், நீதிபதிகளின் தீர்ப்பையும் குறை சொல்லவே முடியாது.. இது முழுக்க முழுக்க அரசியல் ரீதியான நிர்வாகத் தவறு என்பதில் யாருக்கும் சந்தேகமே வரக் கூடாது. வாக்கு வங்கியை மட்டுமே மனதில் வைத்து செயல்பட்ட அரசுகளின் செயல்பாடுதான் தமிழக மக்களின் கலாச்சார அடையாளம் இன்று நாட்டின் தலைநகரில் தலைக்குனிவை சந்திக்கும் நிலைக்குக் காரணமே ஒழிய வேறு எதுவுமே காரணம் இல்லை.