காடுவெட்டி குருவுக்காக சட்டசபையில் தமிழக ஒற்றுமையை காவு கொடுத்த பாமக!
தமிழக சட்டசபையின் சிறப்பு கூட்டத்தில் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ள எதிர்ப்பு தெரிவித்து நேற்று தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இத்தீர்மானத்தின் மீது கருத்துகளை தெரிவித்துவிட்டு காங்கிரஸும் அதன் ஈழ விவகாரப் பங்காளியான மார்க்சிஸ்ட் கட்சியும் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.
ஆனால் தமிழர் நலன் பேசுவதாக "அறிக்கைகளில்" மட்டுமே காட்டிக் கொள்ளுகிற பாட்டாளி மக்கள் கட்சியோ காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கட்சிகளை மிஞ்சி கூட்டத்தையே புறக்கணித்திருக்கிறது. இதற்கு காடுவெட்டி குரு மீது தொடர்ந்து பாய்ச்சப்படும் தேசிய பாதுகாப்புச் சட்டம்தான் காரணமாம்.
சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு தலையை வெட்டுவேன், தீ வைத்து கொளுத்துவேன் என்று பிரகடனம் செய்தால் தண்டனையை அனுபவித்தாக வேண்டியது அவசியம் அல்லவா? சட்டம் கையைக் கட்டிக் கொண்டு வேடிக்கை பார்க்குமா?
காடுவெட்டியின் குருவின் பேச்சுக்கு சாட்சியாகவே இருக்கிறது ஓராண்டுக்கு முன்பு எரிக்கப்பட்ட தருமபுரி நத்தம் காலனி.
எந்த விவகாரத்தில் எதனுடன் முடிச்சுப் போடுவது? தமிழக சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா கொண்டுவந்த தீர்மானம், அதிமுகவின் நலனுக்கானதா? தமிழர் குமுறலின் வெளிப்பாடு அல்லவா? தமிழகத்தின் ஒற்றுமை அல்லவா?
ஊரைக் கொளுத்துவேன் என்று பேசியதால் சிறைக்குப் போன காடுவெட்டி குருவுக்காக தமிழ் இனத்தையே பலி எடுத்தவன் நாட்டில் நடைபெறும் மாநாட்டை தடுக்கக் கோரும் கூட்டத்துக்கு போகமாட்டோம் என்பது என்ன 'தமிழர் நலன்' அக்கறையோ?
திமுக, தேமுதிகவுக்கு அதிமுக மீது கோபம் இருக்காதா? அதையெல்லாம் இனநலன் விஷயத்திலா அந்த கட்சிகள் காட்டுகின்றன?
இதுதான் பாமக முன்வைக்கும் மாற்று அரசியலோ? ஏற்கெனவே சாதிய அடையாளத்தை தூக்கிப் பிடித்து ஊரெல்லாம் சாதிய அமைப்புகளை ஒன்றிணைத்துக் கொண்டு தமிழகத்தில் தனிமைப்பட்டுக் கிடக்கிறது பாட்டாளி மக்கள் கட்சி.
இப்போது தமிழகமே கொந்தளித்துக் கொண்டிருக்கும் போது இதிலும் சாதிய நலன் சார்ந்தே முடிவெடுக்கும் பாமகவின் அரசியல் போக்கு ஒட்டுமொத்த தமிழினத்திடம் இருந்து வெகுதொலைவு அன்னியப்பட்டுக் கிடக்கிறது என்பதே அரசியல் விமர்சகர்களின் கருத்து.