ராஜ்குமார் கடத்தல் வழக்கில் நக்கீரன் கோபாலிடம் ஏன் விசாரிக்கவில்லை.. நீதிமன்றம் கேள்வி
Recommended Video
ஈரோடு: நடிகர் ராஜ்குமாரை, சந்தன மரக் கடத்தல் மன்னன் வீரப்பனிடம் இருந்து மீட்க பேச்சுவார்த்தை நடத்திய அரசு குழுவில் இடம் பெற்றிருந்த, 'நக்கீரன்' கோபால் உள்ளிட்டோரை ஏன் விசாரிக்கவில்லை என்று கோபி நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
2000மாவது ஆண்டு ஆகஸ்ட் மாதம், பெங்களூரில் இருந்து தாளவாடிக்கு மனைவி பார்வதம்மாவுடன் சென்ற கன்னட நடிகர் ராஜ்குமார், சந்தன கடத்தல் வீரப்பன் மற்றும் அவர் கூட்டாளிகளால் கடத்தப்பட்டதாகவும், நூறு நாட்களுக்கு பிறகு விடுதலை செய்ததாகவும், வீரப்பன் உள்ளிட்ட 10 பேர் மீது கோபி கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது. இன்று நீதிபதி மணி தீர்ப்பு வழங்கினார்.
அப்போது, போலீஸ் தரப்பு இந்த வழக்கை மெத்தனமாக கையாண்டதாக சரமாரியாக நீதிபதி கருத்து தெரிவித்தார்.
ராஜ்குமார், அவர் மனைவி பார்வதம்மா ராஜ்குமாரிடம் ஏன் சாட்சியம் பெறவில்லை என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். அரசு சார்பில் வீரப்பனிடம் தூதுவர்களாகச் சென்ற நக்கீரன் இதழ் ஆசிரியர் கோபால், பழ.நெடுமாறன், புதுச்சேரி சுகுமாறன், மனித உரிமை ஆர்வலர் கல்யாணி ஆகியோர் தூது சென்றனர்.
தூதுவர் பணிக்காகச் செல்லும் தங்கள்மீது எதிர்காலத்தில் தமிழக காவல் துறையும், கர்நாடகக் காவல் துறையும் வீரப்பனைச் சந்தித்துப் பேசுவது தொடர்பான எந்த வழக்கும் போடக் கூடாது என்பது இவர்கள் அப்போதைய முதல்வர் கருணாநிதியை சந்தித்து எழுப்பிய கோரிக்கை. அப்போது இரு மாநில அரசுகளின் தலைமைச் செயலாளர்கள் கையொப்பமிட்டு வாக்குறுதியை அளித்தனர்.
இந்த நிலையில்தான், நக்கீரன் கோபால் உள்ளிட்ட தூது செல்வோர் அனைவரிடமும் விசாரணை நடைபெற்றதா என்று இன்று கோர்ட் கேள்வி எழுப்பியது. அவர்களிடம் போலீசார் விசாரிக்கவில்லை என்பதை தீர்ப்பில் நீதிபதி சுட்டிக் காட்டினார். காவல்துறை மெத்தனமாக நடந்து கொண்டதாக அதில் கூறப்பட்டிருந்தது.