என்கவுண்டர் நடந்தது ஏன்... காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் விளக்கம்!
மதுரையில் ரவுடிகள் மீது என்கவுண்டர் நடத்தப்பட்டது ஏன் என்று காவல்துறை கண்காணிப்பாளர் விளக்கம் அளித்துள்ளார்.
Recommended Video
மதுரை : மதுரை சிக்கந்தர்சாவடியில் பட்டபகலில் நடத்தப்பட்ட என்கவுண்டர் பற்றி காவல்துறை கண்காணிப்பாளர் மணிவண்ணன் விளக்கம் அளித்துள்ளார். ரவுடிகளை கைது செய்ய சென்ற போது கைத்துப்பாக்கியால் சுட்டதால் தற்காப்புக்காக போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்த நேரிட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மதுரை செல்லூர் நகர காவல் நிலையத்தில் 2015ல் நடந்த கொலை வழக்கு தொடர்பாக சகுனி என்ற கார்த்தியும், மந்திரி என்கிற முத்து இருளாண்டியையும் பிடிக்க போலீசார் வந்துள்ளனர். அவர்கள் இங்கே இருக்கும் தகவல் கிடைத்து செல்லூர் நகர காவல் ஆய்வாளர் மணிவண்ணன் மற்றும் உதவி ஆய்வாளர் முருகன் தலைமையில் 6 பேர் குழு வந்தனர். அவர்களை பிடிக்க சென்ற போது கதவை மூடிக்கொண்டு உள்ளே விடாமல் ரவுடிகள் இருந்துள்ளனர்.
கதவை உடைத்துக் கொண்டு உள்ளே செல்ல முயன்ற போது ரவுடிகள் துப்பாக்கியால் சுட வந்துள்ளனர். அவர்கள் ஒரு துப்பாக்கியை வைத்திருந்தனர். காவல்துறையினர் துப்பாக்கியை கீழே போட்டுவிடுங்கள் நாங்கள் கைது செய்யத் தான் வந்திருக்கிறோம் என்று கூறி இருக்கிறார்கள்.
ஆனால் ரவுடிகள் அதை கேட்காததால் தற்காப்புக்காக ஆய்வாளரும், துணை ஆய்வாளரும் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதில் இரண்டு பேரும் காயம் அடைந்து விழுந்துள்ளனர். அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
ரவுடிகள் மரணமடைந்துவிட்டனரா என்று மருத்துவர்கள் இன்னும் உறுதிசெய்யவில்லை. இரண்டு குற்றவாளிகள் மீதுமே மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட தென்மாவட்டங்களில் குறைந்தது 6 கொலை முயற்சி வழக்குகளும் 20க்கும் மேற்பட்ட கொள்ளை, ஆட்கடத்தல் உள்ளிட்ட வழக்குகள் உள்ளன.
இருவருமே கீரைத்துறை பகுதியைச் சேர்ந்தவர்கள் . போலீசார் மஃப்டியில் வந்துள்ளனர்,ரவுடிகளிடம் தாங்கள் போலீசார் என்று கூறியுள்ளனர், ஆனால் ரவுடிகள் அதனை கேட்கவில்லை. ஜன்னலை உடைத்துக் கொண்டு சென்றதில் காவல் ஆய்வாளர் ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
மற்றொரு ரவுடி மாயக்கண்ணன் தப்பியோடியுள்ளார். ரவுடிகள் பதுங்கியிருந்த வீட்டில் இருந்து இதுவரை ஒரே ஒரு துப்பாக்கி மட்டுமே பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றும் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.