எஸ்.வி.சேகரிடம் காட்டாத ஆவேசத்தை அப்பாவி மக்கள் மீது காட்டுவது நியாயமா?
Recommended Video
தூத்துக்குடி: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் தன்னெழுச்சியாக ஆயிரக்கணக்கில் திரண்டு நடத்திய புரட்சிப் போராட்டத்தைத் தடுக்க போலீஸார் துப்பாக்கியைக் கையில் எடுத்திருப்பது பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. மக்கள் சமூக வலைதளங்களில் குமுறி வருகின்றனர்.
மக்களுக்கு எதிரான எதுவும் நிலைக்க முடியாது, நீடிக்க முடியாது என்பதை இன்று தூத்துக்குடி மக்கள் நிரூபித்துள்ளனர். இன்று முற்றுகைப் போராட்டம் என்று முன்பே அறிவிக்கப்பட்டு விட்டாலும் கூட மக்கள் இந்த அளவுக்கு குவிவார்கள் என்பதை போலீஸார் எதிர்பார்க்கவில்லை.
இரு மாவட்ட எஸ்பிக்கள் தலைமையில் போலீஸார் குவிக்கப்பட்டாலும் கூட போலீஸாரால் எதுவும் செய்ய முடியாமல் போனது மக்கள் சக்தியின் பலத்தை எடுத்துக் காட்டுவதாக அமைந்தது.
ஸ்டெர்லைட் வேண்டாம்
தூத்துக்குடி மக்களின் ஒரே கோரிக்கை ஸ்டெர்லைட் ஆலை இங்கு வேண்டாம். அதை அகற்றுங்கள் என்பதுதான். ஆனால் அந்த கோணத்தில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதுதான் மக்களின் கோபத்திற்கும் கொந்தளிப்புக்கும் காரணம்.
அரசுத் தரப்பு அலட்சியம்
ஸ்டெர்லைட் விவகாரம் தொடர்பாக பல காலமாக போராட்டம் நடந்து வருகிறது. ஆனால் கடந்த 3 மாதமாக இந்தப் போராட்டம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்தப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர, மக்கள் கோரிக்கையை ஏற்று நிறைவேற்ற அரசுத் தரப்பு ஆக்கப்பூர்வமாக செயல்படவில்லை என்பது மக்களின் குற்றச்சாட்டாக உள்ளது.
போலீஸாரைக் கண்டு அஞ்சாத மக்கள்
இந்த நிலையில்தான் இன்று தன்னெழுச்சியாக பல ஆயிரம் மக்கள், கிராமத்தினர் தூத்துக்குடியில் குவிந்து விட்டனர். இவர்களை ஈஸியாக தடுத்து விரட்டியடித்து விடலாம் என்ற எண்ணத்தில்தான் போலீஸார் இருந்தனர். கண்ணீர்ப் புகைக் குண்டு வீச்சுக்கும் கூட போலீஸார் முயற்சித்தனர்.
மிரட்டிய மக்கள் கூட்டம்
ஆனால் போலீஸாரே சற்றும் எதிர்பார்க்காத அளவில் இன்றைய மக்கள் கூட்டம் புரட்சியாக வெடித்து விட்டது. கண்ணீர்ப் புகைக் குண்டு வீச்சை சற்றும் சட்டை செய்யாமல் புகையை ஊடறுத்து வெடித்து வெளி வந்த மக்களைப் பார்த்து போலீஸாரே மிரண்டு விட்டனர். போதிய முன்னேற்பாடுகளுடன் போலீஸார் வராத காரணத்தால் போராட்டக்காரர்களை அடக்க முடியாமல் போலீஸார் திணறினர்.
உயிரைக் குடித்த போலீஸ்
போராட்டத்தை ஒடுக்க முடியாமல் பின்வாங்கிய போலீஸார் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்குள் கடலென புகுந்த மக்கள் கூட்டத்தின் மீது துப்பாக்கிக் குண்டுகளைப் பாய்ச்சியது. இதை யாரும் எதிர்பார்க்கவில்லை. பலர் படுகாயம். கடைசியாக கிடைத்த தகவல்களின்படி 5 பேர் பலி.
|
மக்களின் கொதிப்பு - குமுறல்
போலீஸ் துப்பாக்கிச் சூடு மக்களிடையே பெரும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் மக்கள் கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
பொதுமக்கள் கோரிக்கையை அலட்சியப் படுத்திய காரணத்தால் இன்று தூத்துக்குடி பெரும் போர்க்களமாக மாறி விட்டது.
|
வாய்ச் சொல் வீரர் ரஜினிக்கும் வசவு
ரஜினிகாந்த் மீதும் மக்களின் கோபம் வெகுவாக திரும்பியுள்ளது. வாய்ச் சொல் வீரராக வலம் வந்து கொண்டிருக்கும் ரஜினியையும் மக்கள் கண்டிக்க ஆரம்பித்துள்ளனர்.
போலீஸுக்கு சவால் விட்ட எஸ்.வி.சேகர்
நான் எங்கேயும் ஓடவில்லை. இங்கேயேதான் இருக்கேன். காவல்துறைக்கு தைரியம் இருந்தால் பிடிக்கட்டும் என்று பகிரங்கமாகவே சவால் விட்டார் காமெடி நடிகர் எஸ்.வி.சேகர். ஆனால் காவல்துறை இதுவரை அவரைப் பிடிக்க முயன்றதாக தெரியவில்லை. ஆனால் போராட்டத்தில் ஈடுபட்ட அப்பாவி மக்களை குருவி சுடுவது போல சுட்டுத்தள்ளியிருப்பது பெரும் வேதனை தருகிறது... அதுவும் ஒரு தனியார் நிறுவனத்திற்காக இத்தனை பலத்தை காவல்துறை பிரயோகித்து தனது மக்கள் 8 பேரை கொன்றிருப்பது உண்மையிலேயே நியாயமானது அல்ல.