காவிரிக்காக போராட திரை கலைஞர்களுக்கு உரிமை இல்லையா? நசுக்கும் நடவடிக்கை ஏன்?
சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தாமதப்படுத்தும் மத்திய அரசுக்கு எதிராக கொந்தளித்துள்ளனர் தமிழக மக்கள். தமிழகத்திற்கு இன்று வருகை தந்த பிரதமர் மோடிக்கு எதிராக கருப்பு கொடி காண்பித்து பெரும் போராட்ட பிரளயத்தை அரங்கேற்றியுள்ளனர்.
இந்திய நாட்டின் பிரதமருக்கே, சாலை மார்க்கமாக செல்வதில் சிக்கல்களை உருவாக்கிவிட்டது இந்த போராட்டங்கள். ஒருபக்கம் ஐபிஎல் போட்டிகளை இதே போராட்டங்களால் புனே நகருக்கு மாற்றிவிட்டனர்.
இதுபோன்ற நிகழ்வுகளை கண்டிப்பாக மத்திய அரசும், மாநில அரசும் விரும்பாது. அது எந்த அரசாக இருந்தாலும்.
கொலைமுயற்சி
இந்த சூழ்நிலையில்தான், ஐபிஎல் போராட்டத்திற்காக சீமான் மீது கொலை முயற்சி வழக்கு பாய்ந்துள்ளது. மோடிக்கு எதிரான போராட்டத்திற்காக கைது செய்யப்பட்ட சீமான் பல்லாவரத்திலுள்ள திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டுள்ளார். இதே போராட்டத்திற்காக கைது செய்யப்பட்ட பாரதிராஜா, கவுதமன், அமீர் போன்ற இயக்குநர்கள், சிட்லபாக்கத்திலுள்ள ஒரு மண்டபத்தில் அடைக்கப்பட்டுள்ளனர்.
விடுதலை செய்திருக்க வேண்டும்
பிரதமர் மோடிக்கு எதிரான போராட்டத்திற்காக அவர்கள் கைது செய்யப்பட்டிருந்ததால், மோடி சென்னையில் இருந்து டெல்லிக்கு விமானத்தில் கிளம்பியதுமே இவர்களை விடுதலை செய்திருக்க வேண்டும். ஆனால், மோடி 3 மணிக்கெல்லாம் டெல்லி கிளம்பிய நிலையிலும், மாலை 6 மணிவரையிலான நிலவரப்படி, இவர்களில் யாரும் விடுதலை செய்யப்படவில்லை.
கைது செய்ய திட்டம்
போராட்டக்காரர்களை கைது செய்து ரிமாண்ட் செய்ய காவல்துறை திட்டமிட்டுள்ளதா என்ற சந்தேகத்தை இது ஏற்படுத்தியுள்ளது. ஐபிஎல் போராட்டத்தின்போது காவலர்கள் தாக்கப்பட்டது குறித்து சீமான் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால், சீமானை கண்டிப்பாக கைது செய்துவிடுவார்கள் என்ற தகவல் பரவி வருகிறது. அவரை அடைத்து வைக்கப்பட்டுள்ள மண்டபத்தை சுற்றி அதிரடி படை குவிக்கப்பட்டுள்ளது இந்த சந்தேகத்தை அதிகரித்துள்ளது.
போராட்ட உரிமை
காவிரிக்காகவும், மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்தும், போராட்டம் நடத்தியதற்காக கைது செய்வது எந்த வகையில் நியாயம் என்ற கேள்வி எழுந்துள்ளது. மக்கள் ஒன்றிணைந்து போராட்டம் நடத்த உரிமை இல்லையா? திரைப்பட கலைஞர்கள் அதை செய்ய கூடாதா? என்ற கேள்வி எழுகிறது. போராட்ட உரிமை ஜனநாயக நாட்டில் எல்லோருக்கும் உள்ள நிலையில், திரைக் கலைஞர்கள் வழக்குகளை போட்டு சிறையில் தள்ளி நசுக்கப்படுவது சரியா என்ற கேள்வி எழுந்துள்ளது.