முதல்ல நீங்க நிறுத்துங்க.. அரசியல் கட்சிகளுக்கு சுப்ரீம் கோர்ட் கொட்டு!
சென்னை: குற்றப்பின்னணி கொண்டவர்களை அரசியல் கட்சிகளே தேர்தலில் நிறுத்தாமல் இருக்க வேண்டும் என்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா கூறுவதும் நல்ல யோசனைதானே.
எம்பி, எம்எல்ஏக்களுக்கு எதிராக குற்ற வழக்கு தொடுக்கப்பட்டுவிட்டால் அவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும், அவர்களை தேர்தலில் போட்டியிட அனுமதிக்க கூடாது என்று வழக்கு தொடுக்கப்பட்டு இருந்தது. 2011ல் பல தனி நபர்கள், அமைப்புகள் இந்த வழக்கை தொடுத்தது.
இதன் தீர்ப்பு இன்று உச்சநீதிமன்றத்தில் வழங்கப்பட்டது. இதில் நீதிபதி தீபக் மிஸ்ரா மிகவும் நிதர்சனமான தீர்ப்பை வழங்கியுள்ளார்.
[குற்ற பின்னணி கொண்ட அரசியல்வாதிகள்... நீதிபதி மிஸ்ரா கொடுத்த சுளீர் தீர்ப்பு!]
மலிந்து விட்டது
அவர் கூறிய தீர்ப்பில் குற்றப்பின்னணி உள்ளவர்களை தேர்தலில் நிறுத்துவதை அரசியல் கட்சிகள் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தீர்ப்பளித்தார். ஊழல் மலிந்து விட்டது ஊழல் மலிந்து விட்டது என்று நாம் கத்தி கொண்டிருப்பதில் எந்த பிரயோஜனமும் இல்லை.
சுத்தமாக இருக்க வேண்டும்
ஒரு வேட்பாளர் நல்லவரா கெட்டவரா அவர் மீது குற்ற பின்னணி இருக்கிறதா என்பதை அறிந்து அவருக்கு சீட் வழங்க வேண்டும். இதற்கு குறிப்பிட்ட அந்த அரசியல் கட்சியின் தலைமை சுத்தமாக இருக்க வேண்டும்.
தார்மீக தகுதி
தலைமை நியாயமாக சுத்தமானவராக இருந்தால் எந்த ஊழலையும் தட்டி கேட்கவும் குறிப்பிட்டவருக்கு சீட் தராமல் இருக்கவும் அவருக்கு தார்மீக தகுதி உள்ளது. நல்லாட்சியை வழங்குவது என்பது தாமும் தனது சுற்றத்தாரும் கறைப்படியாத கைக்கு சொந்தக்காரர்கள் என்பதை நிரூபிக்க வேண்டும்.
மக்கள்தான் எஜமானர்கள்
ஊழல்வாதியை கட்சிகள் வேட்பாளராக அறிவித்தாலும் அவர் கொடுக்கும் காசுக்காக வாக்காளர்கள் விலை போக கூடாது. ஊழல் கறை இல்லாதவரை தேர்வு செய்தால் அந்த மாநிலத்துக்கு தானாக தொழிற்சாலைகள், இதர திட்டங்கள் வந்து சேரும். இதனால் மாநிலம் முன்னேற்றம் அடைவதுடன் மக்களுக்கு வேலைவாய்ப்புகளும் பெருகும்.
ஊழல்வாதி
எனவே 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை கிடைக்கும் பணத்தை காட்டிலும் 5 ஆண்டுகளுக்கும் தொடர்ந்து நமக்கு கிடைக்கும் தொழில் உள்ளிட்ட இதர வளர்ச்சிகளை வாக்காளர்கள் விரும்ப வேண்டும். அதை விட்டுவிட்டு அரசியல் கட்சிகளையும் அரசியல்வாதிகளையும் மட்டுமே குறை கூறுவதை ஏற்க முடியாது. வீட்டின் எஜமானர்கள் வாக்காளர்கள்தான். அவர்கள் விரும்பினால் மட்டுமே நல்லவரோ ஊழல்வாதியோ உள்ளே வர முடியும்.