'அம்மா' மானிய ஸ்கூட்டர் திட்ட துவக்க விழாவில் மோடி பங்கேற்பு ஏன்? எல்லாம் ஒரு கணக்குத்தான்!
Recommended Video
சென்னை: சட்டசபையில் ஜெயலலிதா உருவப்படம் திறக்கப்பட்டபோது அதில் பங்கேற்காத பிரதமர் நரேந்திர மோடி, அம்மா மானிய ஸ்கூட்டர் திட்ட துவக்க விழாவில் பங்கேற்பது ஏன் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
மானிய விலையில் பெண்களுக்கு ஸ்கூட்டர் அளிக்கும் திட்டத்தை, ஜெயலலிதாவின் 70வது பிறந்த நாளான இன்று, பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைக்கிறார்.
எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு செயல்படுத்தப்படும் முக்கியமான கவர்ச்சி திட்டம் இதுவாகும். அம்மா கிரைண்டர், ஃபேன் என்ற பெயர்களில் ஜெயலலிதா கவர்ச்சிகர திட்டங்களால் பரவலான மக்களை சென்றடைந்தார்.
கவர்ச்சி திட்டம்
எடப்பாடி பழனிச்சாமி அரசும், ஜெயலலிதாவின் அதே போன்ற கொள்கைகளை பின்பற்றி, மானிய விலை ஸ்கூட்டர்களை பெண்களுக்கு வழங்குகிறது. இதன் மூலம், அதிமுகவின் முக்கியமான வாக்கு வங்கியான பெண்களை தக்க வைத்துக்கொள்ள முயல்கிறது எடப்பாடி அரசு. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று ஸ்கூட்டர் திட்டத்தை துவக்கி வைக்கிறார் மோடி.
மோடி வரவில்லை
சில நாட்கள் முன்பாக, சட்டசபையில் ஜெயலலிதா உருவப்படம் திறக்கப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் பங்கேற்க, பிரதமர் மோடியை அதிமுக சார்பில் அழைத்ததாகவும், அவர் மறுத்துவிட்டதாகவும் செய்திகள் வெளியாகின. மோடி வரவில்லை என்றபிறகு, தாங்கள் அவரை அழைக்கவேயில்லை என அதிமுக சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
மோடிக்கு நற்பெயர்
அதேநேரம், ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தில் மோடி பங்கேற்க காரணம், வாக்கு வங்கி வேட்டைதான் என கூறப்படுகிறது. "எடப்பாடி அரசின் திட்டத்தை மோடி கிட்னாப் செய்துவிட்டார்" என்று பெயர் தெரிவிக்க விரும்பாத ஒரு அமைச்சர் ஆங்கில ஊடகம் ஒன்றிடம் ஆதங்கம் வெளிப்படுத்தியுள்ளார். ஆம், அது உண்மைதான்.
ஒரு விளம்பரம்
பெரும்பாலான பெண்கள் மனதில் இடம் பிடிக்க கூடிய ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்து, பாஜகவுக்கான அரசியல் ஆதாயத்தை தேடும் முயற்சிதான் மோடியின் பங்கேற்பு என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். ஒரு பைசா செலவு இல்லாமல், ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தால், பாஜகவுக்கு நற்பெயர் கிடைக்க வேண்டும் என்றால் அதில் மோடி பங்கேற்க வேண்டும் என்பதுதான் இதற்கு காரணம்.
மாற்றம்
சமீபத்தில்தான் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் தீவிரவாத நடவடிக்கை அதிகரித்துவிட்டது என்றார். தமிழிசை, எச்.ராஜா உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள், அதிமுக அரசை தீவிரமாக விமர்சனம் செய்ய துவங்கியிருந்தனர். இந்த நிலையில்தான், ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கிறார் என்பதில் இருந்தே, அரசியல் நோக்கத்தை புரிந்து கொள்ள முடிகிறது என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவித்தனர்.