ஜெயலலிதா மரணத்துக்கு பிறகு... சின்னாபின்னமாகும் சசிகலாவின் குடும்பம்...
ஜெயலலிதா மறைந்த பிறகு, அவரது தோழி சசிகலாவின் குடும்பத்தில் பல்வேறு பிரச்சினைகள் நிலவி வருகின்றன.
சென்னை: ஜெயலலிதா மறைந்த பிறகு, அவரது தோழி சசிகலாவின் குடும்பத்தில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதால் ஜெயலலிதாவின் ஆவி அவர்களை பழி வாங்க துடிக்கிறதோ என்று மக்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல்நல குறைபாட்டால் அப்பல்லோ மருத்துவமனையில் 75 நாள்கள் அனுமதிக்கப்பட்டு கடந்த டிசம்பர் மாதம் உயிரிழந்துவிட்டார்.
இந்நிலையில் மருத்துவமனையில் இருந்த ஜெயலலிதாவை சந்திக்க சசிகலா யாரையும் அனுமதிக்காததால் அவர் மீதான சந்தேகம் வலுத்தது. இதை மக்கள் வெளிப்படையாக தெரிவித்தனர்.
அதிமுகவில் பிளவு
ஜெயலலிதா இருந்தபோது ராணுவக் கட்டுகோப்புடன் இருந்த அதிமுகவில் திடீரென பிளவுப்பட்டது. இதனால் சசிகலா அணி, ஓபிஎஸ் அணி என இரு அணிகளாக பிரிந்தது. இதைத் தொடர்ந்து கட்சியின் பொதுச் செயலாளராக சசிகலா பொறுப்பேற்றுக் கொண்டார்.
சொத்துக் குவிப்பு வழக்கு
இந்நிலையில் மாநில முதல்வராக பொறுப்பேற்க எம்எல்ஏ-க்களின் குழுத் தலைவராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனிடையே உடல்நல கோளாறு காரணமாக அவரது கணவர் நடராஜன் அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலாவின் சிறை தண்டனை உறுதி செய்யப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
குடும்பச் சண்டை
திவாகரனின் சம்பந்தியான கூடுதல் எஸ்.பி ஜெயச்சந்திரன் கன்னியாகுமரியில் இருந்து கரூர் தலைமையிட கூடுதல் எஸ்பியாக இடமாற்றம் செய்யப்பட்டார். இதற்கு காரணம் டிடிவி தினகரன்தான் என்ற தகவல் வெளியாகியதால் அவருக்கு எதிராக சசிகலாவின் தம்பியான திவாகரன் மோதல் போக்கு ஏற்பட்டது.
அதிமுக சின்னம் முடக்கம்
இந்நிலையில் ஆர்கே நகர் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதும் அதிமுகவின் இரட்டை இலை சின்னம் யாருக்கு என்ற போட்டியில் இரு அணிகளும் தேர்தல் ஆணையத்தை நாடிய நிலையில் அச்சின்னம் முடக்கப்பட்டது. இது கட்சி பேதமில்லாமல் பலரும் அதிருப்தி தெரிவித்தனர்.
இடைத்தேர்தல் ரத்து
ஆர்கே நகர் இடைத்தேர்தலில் எப்படியாயினும் வெற்றி பெற்றுவிட்டால் முதல்வராக பொறுப்பேற்கலாம் என்று டிடிவி தினகரன் திட்டமிட்டதாக கூறப்பட்டது. இதனால் வரலாறு காணாத அளவுக்கு ஆர்கே நகரில் பணப்பட்டுவாடா நடைபெற்றது. இறுதியில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது.
ஃபெரா வழக்கு
தினகரனின் ஆதரவு அமைச்சரான விஜயபாஸ்கர் வருமான வரித்துறையினரிடம் வசமாக சிக்கியுள்ளார். இவர் பதவியில் நீடிப்பது குறித்து முதல்வர் எடப்பாடியுடன் தினகரன் மோதி வருகிறார். பெரா வழக்கில் தினகரனுக்கு சிறை தண்டனை காத்து கிடப்பதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.
மகாதேவன் மரணம்
இந்த நிலையில் சசிகலாவின் 2-வது அண்ணன் வினோதகனின் மகன் மகாதேவன் இன்று திருவிடைமருதூர் கோயிலுக்கு சாமி தரிசனத்திற்காக சென்றார். அப்போது திடீரென அவருக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது. உள்ளூர் மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். நிலைமை மோசமாக இருந்ததால், அவர் கும்பகோணத்திலுள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால், அங்கு அவரை பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள், மகாதேவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
என்ன காரணம்?
ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் சசிகலாவின் குடும்பத்தில் நிலவி வரும் பல்வேறு சிக்கல்களுக்கு என்ன காரணமாக இருக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் வினவி வருகின்றனர். ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது இந்த மன்னார்குடி கும்பலின் ஆட்டத்தை ஒருபோதும் அனுமதித்ததில்லை. இந்தநிலையில் சசிகலாவின் குடும்பத்தில் புயல் கிளம்பியுள்ளதால் ஜெயலலிதாவின் ஆன்மா தனக்கு எதிராக செயல்பட்டவர்களை பழி வாங்க துடிக்கிறதோ என்ற ஐயம் எழுந்துள்ளது.