அரசியலுக்கு வந்தால் இமயமலைக்கு ரஜினி போகமாட்டார்... நண்பர் ராஜ்பகதூர் திட்டவட்டம்
நடிகர் ரஜினி அரசியலுக்கு வந்தால் இமயமலைக்கு போகமாட்டார் என்று அவரது 47 ஆண்டுகால நண்பர் ராஜ்பகதூர் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் இமயமலைக்கு போகமாட்டார் என்று அவரது நீண்டகால நண்பர் ராஜ்பகதூர் சன் நியூஸ் தொலைக்காட்சி பேட்டியில் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த், அரசியலுக்கு வந்து தமிழக முதல்வராக ஆட்சியில் அமரவேண்டும் என்று கடந்த 20 ஆண்டுகளாக அவரின் ரசிகர்கள் கோரிக்கைவிடுத்து வருகிறார்கள். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் ரஜினி தனது ரசிகர்களை நேரில் சந்தித்தார்.
அரசியல் விருந்து
அப்போது அரசியல், போர், இமயமலை, அரசியல் சிஸ்டம் கெட்டுப்போச்சி என்றெல்லாம் பேசி ரசிகர்களுக்கு அரசியல் விருந்து வைத்தார்.
போர் வரும்
மேலும் எல்லா மாவட்ட ரசிகர் மன்ற உறுப்பினர்களுடன் நேரில் அமர்ந்து போட்டோ எடுத்துக்கொண்டார். அப்போது ரஜினி ரசிகர்கள் மத்தியில், " எல்லோரும் வீட்டுக்குப் போங்க. உங்களுக்கும் கடமை இருக்கு. உங்க வேலைய பாத்திட்டே இருங்க. போர் வரும். அப்போது பாத்துக்கலாம். ஆண்டவன் இருக்கான் " என்று சொல்லி மகிழ்ச்சியாக அனுப்பி வைத்தார். இது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜ்பகதூர் பேட்டி
இந்த நிலையில் இன்று சன் நியூஸ் சேனலுக்கு நண்பர் ராஜ்பகதூர் பேட்டியளித்தார். அதில் நிருபர் கேட்டகேள்விகளுக்கு ராஜ் பகதூர் தெளிவாகப் பதிலளித்தார்.
நோ இமயமலை
" மன நிம்மதிக்காகத்தான் ரஜினி இமயமலைக்குப் போகிறார். அவர் அரசியலுக்கு வந்துவிட்டால் இமையமலைக்கே போகமாட்டார். அதே போல பெங்களூருவுக்கும் ரஜினி வரமாட்டார் " என்று ராஜ்பகதூர் பேட்டியில் தெரிவித்துள்ளார்.