ஆமா.., இங்க இவ்வளோ அமளி துமளி நடக்குது, ரஜினிகாந்த் எங்கே போனாரு?
சென்னை: தமிழகத்தில் மாணவி சோபியா விவகாரம் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டுள்ள நிலையில், விரைவில் கட்சி துவங்குவதாக அறிவித்த வருங்கால அரசியல்வாதி, நடிகர் ரஜினிகாந்த் அதுபற்றி வாய் திறக்கவில்லை.
சோபியா கைதுக்கு கட்சி பேதம் மறந்து ஸ்டாலின் முதல் டிடிவி தினகரன் வரை கண்டனம் தெரிவித்தாகிவிட்டது. கமல்ஹாசனும் வழக்கமான பாணியில் கண்டித்துவிட்டார்.
சோபியாவை நிபந்தனையற்ற ஜாமீனில் விடுவித்துவிட்டது நீதிமன்றம். நீதிமன்றமே ஜாமீனில் வெளியேவிட்ட பிறகும், சோபியா விவகாரத்தில் இன்னும் கருத்து கூறாமல் உள்ளார் உச்ச நடிகர்.
என்ன காரணம்
விமான நிலையத்தில் வைத்து தமிழிசையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது குற்றம் என்பதற்காக ரஜினிகாந்த் அமைதிகாக்கிறாரா, அல்லது, சோபியாவையும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராளிகளை குறிப்பிட்டதை போல சமூக விரோதி என கூற காத்திருக்கிறாரா என்று கேட்கிறார்கள் ரசிகர்கள். ஒருவேளை, முதலாவதுதான் காரணம் என்றால், இதுபோன்ற கூச்சலை ரஜினிகாந்த்தே முன்பு எழுப்பியுள்ளார்.
சென்னை ஏர்போர்ட் நியாபகம் வருகிறதா
கடந்த மே மாதம் 30ம் தேதி, சென்னை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களுக்கு ரஜினிகாந்த் அளித்த பேட்டியை மறக்க முடியுமா? பத்திரிகையாளர்கள் இரு கேள்விகள் கேட்டதற்கே 'யே' என்று சத்தம் போட்டார் ரஜினிகாந்த். வேற கேள்வி இருக்கிறதா என முகத்தை கோபத்தோடு வைத்துக் கொண்டு கேட்டார். எதற்கெடுத்தாலும் போராட்டம், போராட்டம் என்றால் தமிழகமே சுடுகாடாகிவிடும் என்று அவர் கூறியது இதன் உச்சம்.
ஏர்போர்ட் தகராறு
தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம் குறித்த கேள்விக்குதான் இப்படி கோபத்தை வெளிப்படுத்தினார் ரஜினிகாந்த். அதுவும் ஏர்போர்ட்தான். சோபியா சம்பவம் நடந்ததும் ஏர்போர்ட்தான். உடனே, சோபியா கோஷமிட்டது விமானத்திற்குள் என்கிறார்களே, அதுவும் ரஜினி கூறியதும் ஒன்றுதானா என்று யாருக்காவது மனதில் கேள்வி எழும்.
போலீசில் புகார்
விமானத்திற்குள் வைத்து குழப்பம் செய்தால் அதற்குரிய வழக்கு உண்டுதான். ஆனால், விமான நிறுவனம் அப்படி எந்த புகாரையும் போலீசில் பதிவு செய்யவில்லை என்பதுதான் இதில் விஷயம். எனவே, ஏர்போர்ட்டில் கோஷமிட்டது என்பது தமிழிசை மற்றும் சோபியா ஆகியோருக்கு நடுவேயான மோதல்தான். இதற்காக போலீசில் புகார் கொடுத்திருக்க வேண்டுமா என்பதுதான் சர்ச்சைக்கு காரணம்.
ரஜினி மட்டும் கப்சிப்
இருப்பினும், முக்கிய புள்ளிகளில், ரஜினிகாந்த் மட்டும் இன்னும் இந்த விஷயத்தில் இன்னும் கருத்து கூறாமல் இருப்பதன் நோக்கம், 2வது காரணம்தானா? கோஷமிட்டதால் சோபியாவையும் சமூக விரோதி என ரஜினிகாந்த் நினைக்கிறாரா? அல்லது தமிழகத்தில் இப்படியெல்லாம் நடப்பதும், தேசிய ஊடகங்கள் கூட விவாதிப்பதும், சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் ஆவதும் ரஜினிகாந்த்துக்கு தெரியாமல் இருக்கிறாரா? அவர்தான் பதில் சொல்ல வேண்டும்.