கருணாநிதியிடம் படித்த 'பாடத்தை' வைத்து எம்ஜிஆர் ஆட்சியாம்.. மொத்தமாக குழப்பிய ரஜினிகாந்த்
Recommended Video
சென்னை: ஒருபக்கம் அதிமுக நிறுவனரான எம்ஜிஆரை புகழ்ந்த கையோடு மறுபக்கம், திமுக தலைவர் கருணாநிதியை புகழ்ந்த ரஜினிகாந்த், அனைத்து தரப்பையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.
சென்னை வேலப்பன் சாவடியில் உள்ள எம்.ஜி.ஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் நிறுவப்பட்டுள்ள எம்.ஜி.ஆர் சிலையை, நேற்று மாலை ரஜினிகாந்த் திறந்துவைத்தார். அரசியலில் ஈடுபட போவதாக ரஜினிகாந்த் அறிவித்த பிறகு பங்கேற்ற முதல் பொது நிகழ்ச்சி இது என்பதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.
சிலை திறப்புக்கு பிறகு விழாவில், பேசிய ரஜினிகாந்த் அதை ஒரு அரசியல் உரை போலவே பேசினார்.
மூன்று முன்னாள் முதல்வர்கள்
அவரது பேச்சின்போது, தமிழகத்தை ஆண்ட மூன்று முதல்வர்களை பாராட்டினார். எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா ஆகிய மூவரையும் அவர்களின் வெவ்வேறு தகுதிகள் அடிப்படையில் பாராட்டி பேசினார். திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளுக்கும் தமிழகத்தில் நல்ல வாக்கு வங்கி உள்ளதால், காங்கிரசை சேர்ந்த காமராஜரை மறந்துவிட்டார் போலும் ரஜினிகாந்த் என்ற முணுமுணுப்பு விழா கூட்டத்திலேயே எழுந்தது.
எம்ஜிஆருக்கு புகழாரம்
பணத்தை கொடுத்தே சிவந்த கை எம்ஜியாருடையது என்றும், அவர் ஒரு தெய்வ பிறவி என்றும் புகழாரம் சூட்டினார் ரஜினிகாந்த். இந்தியாவிலேயே கட்சியை கட்டுப்பாட்டுடன், நல்ல ஆளுமையுடன் வைத்திருந்தவர் ஜெயலலிதா என்றும் ரஜினிகாந்த் தெரிவித்தார். ஆனால் இதன்பிறகு பேசியதுதான் ஹைலைட்.
ஒரே நிமிடத்தில் இப்படியா
13 வருடங்கள் தொடர்ந்து ஆட்சியில் இருந்தவர் எம்ஜிஆர் என்று கூறிய ரஜினிகாந்த், ஆனால் அந்த 13 வருடங்களும், ஆட்சிக்கு வரமுடியாவிட்டாலும், கட்சியை உடையாமல் பாதுகாத்தவர் கருணாநிதி என்றார் ரஜினிகாந்த். அதாவது, மக்களிடம் செல்வாக்கு பெற்று எம்ஜிஆர் தொடர்ந்து ஆட்சியில் இருந்தார் என அங்கே ஒரு ஷொட்டு, ஆட்சியில் இல்லாவிட்டாலும் அதை முன்வைத்து கட்சியினர் வெளியேறிவிடாமல் தடுத்து காப்பாற்றிக்கொண்டார் கருணாநிதி என்று இங்கே ஒரு பாராட்டு.
இருவருக்கும் புகழாரம்
ஆரம்பத்தில் சினிமா உலகில் நண்பர்கள்தான் என்றபோதிலும், கருணாநிதியும், எம்ஜிஆரும் எதிர்த்து அரசியல் செய்தவர்கள். கருணாநிதியை எம்ஜிஆருக்கு எதிரானவர் என்றே தனது கடைசி தேர்தல் பிரச்சாரம் வரை சொல்லி கட்சியை நடத்தி வந்தவர் ஜெயலலிதா. ஆனால் ஜெயலலிதா சிறப்பாக கட்சி நடத்தினார் என்று இதே மேடை பேச்சில் சொன்ன ரஜினிகாந்த், அடுத்தடுத்து எம்ஜிஆரையும், கருணாநிதியைும் புகழ்ந்தார்.
கருணாநிதியிடம் பாடம் படித்த எம்ஜிஆர் ஆட்சி
இதுமட்டுமா, எம்ஜிஆரை போல ஆட்சியை தரப்போகிறேன் என்று 'பிரகடனம்' செய்த ரஜினிகாந்த், அடுத்த சில வினாடிகளிலேயே கருணாநிதியிடம் அரசியல் கற்றதாகவும் பேசினார். எல்லோரிடமும் உள்ள நல்லவற்றை ரஜினிகாந்த் ஈர்த்துக்கொண்டு அரசியல் நடத்துவாரு, என அவரது ரசிகர்கள் வேண்டுமானால் சொல்லலாம். ஆனால்,ரஜினிகாந்த் பேச்சை கேட்ட நெட்டிசன்களோ, ஏணி சின்னத்தில் ஒரு குத்து, தென்னை மரம் சின்னத்தில் ஒரு குத்து என ரஜினிகாந்த் சரமாரியாக குத்தி தள்ளிவிட்டார் என்று திரைப்பட காமெடி ஒன்றை நினைவுபடுத்தி கிண்டல் செய்து வருகிறார்கள்.