ஒரத்தநாடு திமுக வேட்பாளரான 'சசிகலா உறவினர்' ராஜ்குமார் மாற்றப்பட்டது ஏன் தெரியுமா?
தஞ்சாவூர்: ஒரத்தநாடு தொகுதி திமுக வேட்பாளராக முதலில் அறிவிக்கப்பட்ட முன்னாள் மத்திய இணை அமைச்சர் பழனிமாணிக்கத்தின் தம்பி ராஜ்குமார் திடீரென போட்டியிட விருப்பமில்லை என்று கூற தற்போது மாஜி எம்.எல்.ஏ. ராமச்சந்திரன் களமிறக்கப்பட்டுள்ளார். சசிகலா குடும்பத்தினரின் நெருக்கடி மற்றும் திமுகவினர் ஒத்துழைப்பு கிடைக்காததுதான் ராஜ்குமார் போட்டியிட விரும்பாதது என்கின்றன திமுக வட்டாரங்கள்.
சட்டசபை தேர்தலில் தஞ்சாவூர் தொகுதியை தம்பி ராஜ்குமாருக்கு பெற்றுத் தர வேண்டும் என்பதில் மும்முரமாக இருந்தார் பழனிமாணிக்கம். ஆனால் ஒரத்தநாடு தொகுதிதான் ராஜ்குமாருக்கு கிடைத்தது.
ஒரத்தநாடு தொகுதியில் அதிமுக சார்பில் அமைச்சர் வைத்திலிங்கம் போட்டியிடுகிறார். மேலும் பழனிமாணிக்கம் குடும்பத்தினரும் சசிகலா குடும்பத்தினரும் நெருங்கிய உறவினர்கள். சசிகலாவை அத்தாச்சி என்றுதான் அழைப்பார் பழனி மாணிக்கம்.
அத்துடன் சசிகலா அண்ணன் மகன் மகாதேவனும் ராஜ்குமாரும் ஒரே வீட்டில் திருமணம் செய்த சகலைகள்... இதனால் ஒரத்தநாடு தொகுதியை வேண்டாம் என கூறிவிடுங்கள்... அதிமுக எளிதில் வென்றுவிடும் என சசிகலா குடும்பத்தினர் நெருக்கடி கொடுத்திருக்கின்றனர்....
மறுபக்கம் ஒரத்தநாடு தொகுதிக்கு உட்பட்ட 3 ஒன்றிய செயலாளர்களுக்கும் பழனிமாணிக்கத்துக்கு ஏழாம் பொருத்தம்... ராஜ்குமாரை வேட்பாளராக அறிவித்த உடனேயே செல்போனை சுவிட்ச் ஆப் செய்தவர்கள்தான்... கண்டுகொள்ளவே இல்லை. இதனால் ராஜ்குமார் தரப்பு நொந்து போக பழனிமாணிக்கம் அறிவாலயத்தில் பஞ்சாயத்து வைத்தார்.
இந்த பஞ்சாயத்தின் போது துரைமுருகனுடன் பழனிமாணிக்கம் மல்லுக்கட்டினார் எனவும் கூறப்படுகிறது. இத்தகைய களேபரங்களுக்கு பின்னர்தான் மாஜி எம்.எல்.ஏ. ராமச்சந்திரனை திமுக தலைமை ஒரத்தநாடு தொகுதி புதிய வேட்பாளராக அறிவித்துள்ளது.