யாரை காப்பாற்றுவதற்காக வழக்குப்பதிவு இழுத்தடிக்கப்பட்டது?... கனிமொழி எம்.பி கேள்வி
பொள்ளாச்சி: பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் யாரை காப்பாற்றுவதற்காக வழக்கு பதிவு செய்யப்படாமல் இழுத்தடிக்கப்பட்டது என்று திமுக எம்.பி. கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.
பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய கோரி திமுக எம்.பி கனிமொழி தலைமையில் பொள்ளாச்சியில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தடையை மீறி போராட்டம் நடத்தியதால், எம்.பி. கனிமொழி உள்ளிட்டோரை போலீஸார் கைது செய்தனர். இதனையடுத்து மாலையில் அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
கைதான கனிமொழி எம்.பி விடுவிப்பு... பொள்ளாச்சியில் தடையை மீறி ஆர்ப்பாட்டம்
மறுபடியும், மறுபடியும்
ஆர்ப்பாட்டத்தின்போது எம்.பி. கனிமொழி பேசியதாவது: பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரர், காவல் நிலையத்தில் புகார் அளித்த சில நிமிடங்களில் , அவரை அடிப்பதற்கு ஆட்கள் வருகிறார்கள். செய்தியாளர்கள் சந்திப்பின்போது மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை, மறுபடியும் மறுபடியும் குறிப்பிடுகிறார். சட்டத்தின்படி பாதிக்கப்பட்ட குழந்தைகளின் அடையாளம் யார் என்பதை பாதுகாக்கப்பட வேண்டும். ஆனால் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர் வெளியில் வருகிறது.
சந்தேகம்
பத்திரிக்கையாளர்கள் வெளியுலகிற்கு தெரிவித்த பிறகு தான் வலுக்கட்டாயமாக வழக்கு செய்யப்பட்டது. யாரை பாதுகாப்பதற்காக அவர்களை இவ்வளவு நாள் தள்ளிப் போட்டார்கள் என்பது சொல்ல வேண்டும். பெண்ணின் பெயரை வெளியிட்டு இருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது.
பெயரை வெளியிட்டது ஏன்?
ஒரு பெண்ணின் பெயரை வெளியிட்டால் மற்ற 250க்கும் மேற்பட்ட பெண்கள் மவுனமாக இருப்பார்கள் என்பதற்காகவே , அவரின் பெயரை வெளியிட்டுள்ளனர். பிரஸ்மீட்டில் யாரும் கேள்வி எழுப்பாத போது, மாவட்ட கண்காணிப்பாளர் ஆளும் கட்சியினருக்கு தொடர்பு இல்லை என்று தாமாக தெரிவிப்பது எப்படி எடுத்துக் கொள்வது என்று தெரியவில்லை.
குற்றவாளிகள் தப்பி இருப்பார்கள்
சில பேர் சொல்கிறார்கள் நாங்கள் அரசியல் ஆக்குகிறோம் என்று, ஆனால் எதிர்க்கட்சித் தலைவர் மு க ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டு தொடர்ந்து வலியுறுத்தி இதன் காரணமாகவே வழக்கு பதிவு செய்யப்படுகிறது. அரசியல் கட்சியினர் இந்த விவகாரத்தை கையில் எடுக்கவில்லை என்றால், குற்றவாளிகள் தப்பி இருப்பார்கள்.
பார் நாகராஜ் நீக்கம் ஏன்?
அரசியல் சம்பந்தமே இல்லை என்று சொல்லப்படும் போது எவ்வாறு அதிமுகவிலிருந்து பார் நாகராஜ் நீக்கப்பட்டார். வழக்கு பதிவு செய்யப்படாமல் தள்ளிப்போட்டுக்கொண்டே இருந்தால் மக்கள் மறந்துவிடுவார்கள் என்ற எண்ணத்தில் இருந்துள்ளனர் என்று கூறினார்.