பாரிவேந்தர் மீது புகார் கொடுத்தும் விசாரிக்காதது ஏன்? - உயர் நீதிமன்றம் கேள்வி
சென்னை: மாயமான வேந்த மூவீஸ் மதன் குறித்து பச்சைமுத்து என்கிற பாரிவேந்தரிடம் ஏன் விசாரிக்கவில்லை என்று போலீசாருக்கு கேள்வி எழுப்பியுள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.
தற்கொலைக் கடிதம் எழுதிவைத்துவிட்டு தலைமறைவான மதன் பற்றி இதுவரை எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. போலீசார் பல இடங்களில் தேடிப் பார்த்து அமைதியாகிவிட்டனர்.
மதனுடன் தொடர்பிலிருந்த நடிகர்கள், தயாரிப்பாளர்கள் அத்தனைப் பேரையும் போலீசார் விசாரித்துவிட்டனர். அவரை போலீசார் ரகசியமாக கைது செய்து வைத்துள்ளதாக சிலர் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மதன் வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, போலீசாருக்கு நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
மதனுக்கும் பாரிவேந்தருக்குமான தொடர்பு பற்றித் தெளிவாகத் தெரிந்த பிறகும் ஏன் பாரிவேந்தரை போலீசார் விசாரிக்கவில்லை எனவும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
பாரிவேந்தருக்குத்தான் மதன் இருக்குமிடம் பற்றி தெரியும் என அவரது தாயார் தங்கம் திட்டவட்டமாக கூறியுள்ளார். தங்கள் குடும்ப விழாக்களில் பாரிவேந்தர் பங்கேற்றது பற்றிய புகைப்படங்களையும் தங்கம் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.