பிரபல ரவுடி பினு திடீர் சரண்டர் பின்னணி என்ன?
சுமார் 10 நாட்களாக தலைமறைவாக இருந்த ரவுடி பினு திடீரென சரணடைந்ததன் பின்னயில் இன்று இரவு போலீசார் நடத்தவுள்ள அதிரடி ஆபரேஷன் தான் காரணம் என்ற தகவல் கசிந்துள்ளது.
Recommended Video
சென்னை: சென்னையில் பிரம்மாண்டமாக பிறந்தநாள் கொண்டாடிவிட்டு தலைமறைவாக இருந்த ரவுடி பினு இன்று திடீரென போலீசில் சரணடைந்துள்ளான். இந்த திடீர் முடிவுக்கு சென்னை மாநகர போலீசார் இன்று இரவு நடத்தவுள்ள ஆபரேஷன் தான் முக்கிய காரணம் என்று தகவல் கசிந்துள்ளது.
சென்னை பூந்தமல்லியை அடுத்த மலையம்பாக்கத்தில் கடந்த பிப்ரவரி 2ம் தேதி நள்ளிரவு ரவுடி பினுவின் பிறந்தநாள் பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டது. பட்டாக்கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் ஒரே இடத்தில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் ஒரே இடத்தில் கூடினர். அவர்களை சுற்றி வளைத்த போலீசார் 75 பேரை மடக்கிப் பிடித்தனர்.
விழா நாயகனான ரவுடி பினு, கனகு உள்ளிட்ட 3 பேர் மட்டும் தப்பியோடிவிட்டனர். சுமார் 10 நாட்களாக பினு மற்றும் அவனது நெருங்கிய கூட்டாளிகளை 4 தனிப்படை போலீசார் சேலம், வேலூர், கேரளா உள்ளிட்ட இடங்களில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். ரவுடிகள் அனைவரும் ஒரே இடத்தில் கூடி பிறந்தநாள் கொண்டாடும் அளவிற்கு தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நிலை இருப்பதாக கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.
திடீரென சரணடைந்தது ஏன்?
இந்நிலையில் ரவுடி பினு இன்று திடீரென சென்னை அம்பத்தூர் காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளான். ஆள் கடத்தல், போதைப்பொருள் கடத்தலில் கொடி கட்டிப் பறந்த பினு முக்கிய விவிஐபிகளின் கூலிப்படைத் தலைவனாகவும் இருந்துள்ளான். தற்போது தப்பியோடிய போதும் அரசியல்வாதிகளின் ஆதரவோடே தலைமறைவாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.
பினுவுக்கு கிடைத்த ரகசிய தகவல்
இந்நிலையில் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் பதுங்கியுள்ள 30 ரவுடிகளை இன்று இரவு அதிரடியாக தூக்க போலீஸ் திட்டமிட்டுள்ளதாக ஒரு தகவல் கூறுகிறது. இந்த தகவல் கசிந்ததாலேயே பினு அவசர அவசரமாக போலீசில் சரணடைந்துள்ளான் என்று தெரிகிறது.
பினு உஷார் நடவடிக்கை
மேலும் தன்னுடைய உயிருக்கு ஆபத்து இருக்கக் கூடாது என்பதற்காக உஷாராக முன்கூட்டியே தான் திருந்தி வாழ ஆசைப்படுவதாக ஒரு வீடியோ வாக்குமூலத்தை பதிவு செய்து வைத்துள்ளான். போலீசிடம் பினு சரணடைந்த நிலையில் இந்த வீடியோ தற்போது ரிலீஸாகியுள்ளது.
பினு சொல்றது நம்புற மாதிரி இல்லையே
வீடியோவில் பேசும் பினு தான் பெரிய ரவுடி இல்லை என்று வாக்குமூலம் அளிக்கிறான். தம்பி ஏற்பாடு செய்ததாலேயே பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு வந்ததாகவும், இந்த ஏற்பாடு குறித்து தனக்கே தெரியாது என்றும் பினு கூறுவது ஏற்கும்படியாக இல்லையே என்ற சந்தேகம் வருகிறது.