ஜெ.சிகிச்சை வீடியோவை ஆணையத்திடம் கொடுக்காதது ஏன்... சசிகலாவுக்கு ஆறுமுகசாமி அடுக்கடுக்கான கேள்வி
ஜெயலலிதா சிகிச்சை வீடியோவை ஆணையத்திடம் கொடுக்காதது ஏன்? என்று சசிகலாவுக்கு ஆறுமுகசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
Recommended Video
சென்னை: ஜெயலலிதா சிகிச்சை வீடியோவை ஆணையத்திட்ம கொடுக்காமல் டிடிவி தினகரனிடம் கொடுத்தது ஏன்? என்று ஆறுமுகசாமி சசிகலாவுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜெயலலிதா கடந்த 2016-ஆம் ஆண்டு உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டு அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சுமார் 75 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு அவர் டிசம்பர் 5-ஆம் தேதி உயிரிழந்தார்.
அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டுகளை அடுத்து ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. இந்நிலையில் அவர் கடந்த நவம்பர் மாதம் முதல் தனது விசாரணையை தொடங்கியுள்ளார்.
ஆர்கே நகர் தேர்தலுக்கு முன்பு....
இந்நிலையில் ஆர்கே நகர் தேர்தலுக்கு முன்பு ஜெயலலிதா சிகிச்சை பெற்ற வீடியோ என்று கூறி ஒரு வீடியோவை தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் வெளியிட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இந்த வீடியோ சசிகலாவால் எடுக்கப்பட்டது என்றும் விசாரணைக்காக அவற்றை தினகரனிடம் கொடுத்திருந்ததாகவும் கூறப்பட்டது.
சசிகலாவின் கோரிக்கைகள்
ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி கமிஷன் இதுவரை 22 பேரிடம் விசாரணை நடத்தி வாக்குமூலத்தை பெற்றது. இந்நிலையில் சசிகலாவுக்கு ஆணையம் சம்மன் அனுப்பியது. சம்மனுக்கு பதில் அளிக்க வேண்டும் என்றால் தன் மீது புகார் கொடுத்தவர்கள் யார் என்ற விவரத்தை கூற வேண்டும் என்றும் ஆணையம் விசாரித்த சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை செய்ய வேண்டும் என்றும் சசிகலா தரப்பு கோரியிருந்தது.
தபாலில் வாக்குமூலங்கள்
இந்த இரு கோரிக்கைகளுக்கும் ஆணையம் ஒப்புதல் அளித்துவிட்டது. சசிகலா தரப்பு குறுக்கு விசாரணை செய்ய இன்று முதல் 15 நாட்கள் காலஅவகாசம் அளித்துள்ளது. மேலும் 22 பேரிடம் பெற்ற வாக்குமூலத்தை சசிகலாவுக்கு விரைவு தபாலில் அனுப்பப்பட்டுள்ளது. அப்போது சில கேள்விகளையும் ஆறுமுகசாமி எழுப்பியுள்ளார்.
சசிகலாவுக்கு கேள்வி
இது குறித்து ஆறுமுகசாமி தனது கடிதத்தில் குறிப்பிடுகையில், ஜெயலலிதா சிகிச்சை பெறும் வீடியோவை விசாரணை ஆணையத்தில் தாக்கல் செய்யாதது ஏன்? வீடியோவை ஆணையத்திடம் தாக்கல் செய்யாமல் டிடிவி தினகரனிடம் கொடுத்தது ஏன்?. சிறையில் இருந்தாலும் ஆணையம் செயல்படும் விதம் குறித்து உங்களுக்கு (சசிகலா) நன்கு தெரியும். ஆணையத்திடம் நீங்களாக முன்வந்து வீடியோவை கொடுத்திருக்க வேண்டும். ஜெயலலிதா சிகிச்சை, உடல்நலம் குறித்து தெரிந்த ஒரே நபர் நீங்கள்தான். ஆணையம் அமைக்கப்பட்டதும் நீங்கள் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்திருக்க வேண்டும் என நீதிபதி ஆறுமுகசாமி சசிகலாவிடம் அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்துள்ளார்.