அதிமுகவின் கட்டுக்கோப்பை குலைத்த பாஜகவை பழிச்சொல்ல சசிகலா தயங்குவது ஏன்? ஜவாஹிருல்லா
கடந்த ஐந்து மாதங்களாக ஒரு நிரந்தரமாக ஆளுநர் நியமிக்கப்படவில்லை. அப்படி நியமிப்பதற்கு பன்னீர் செல்வம், சசிகலா ஆகியோர் எவ்விதக் கோரிக்கையையும் மத்திய அரசிடம் வைக்கவில்லை ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.
சென்னை: அதிமுக-வின் கட்டுக்கோப்பைக் குலைத்த பாஜகவை பழிசொல்ல அக்கட்சியின் பொதுச் செயலாளர் சசிகலா தயக்கம் காட்டுவது ஏன் என்று மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
அதிமுக ஆட்சி வெளிப்படைத்தன்மையில்லாத ஒரு மர்மமாகவே சென்று கொண்டிருந்தது. அதிலும் குறிப்பாக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது முதல் சசிகலா அதிமுகவின் பொதுச் செயலாளராகவும், அதற்குப் பின்பு சட்டமன்றக்குழுத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டது வரை என அனைத்துமே மர்மமாகவே உள்ள நிலையில் அந்த மர்மத்தை சிறிதளவு கலைக்கக்கூடிய வகையில் பன்னீர் செல்வம் நேற்றைய மெரினா பேட்டி அமைந்திருந்தது. அவரது பேட்டியைத் தொடர்ந்து தமிழக அரசியலில் பிரளயம் ஏற்பட்டுள்ளது.
முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா உடல்நலம் குன்றி அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது முதல் அவருடைய மரணம், மரண அறிவிப்பு வந்த விதம் (அறிவிப்பு வருவதற்கு அரை மணி நேரம் முன்னதாக பிரதமர் மோடி 11 மணிக்கே தனது ட்விட்டர் பதிவில் ஜெயலலிதா மறைந்து விட்டதாக அறிவித்தார்), அதற்குப் பிறகு ஒ.பன்னீர் செல்வம் முதலமைச்சராகப் பதவியேற்றது என அனைத்து விஷயங்களிலும் மத்திய ஆட்சியில் இருக்கும் பாஜகவுக்கு இசைந்து தான் ஒ. பன்னீர் செல்வம் மற்றும் சசிகலா ஆகிய இருவரும் செயல்பட்டனர்.
குறிப்பாக ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போது வலிமையாக எதிர்த்த மத்திய பாஜக அரசின் பல்வேறு திட்டங்களுக்கு அவர் மருத்துவமனையில் இருந்துபோதும், அவர் மரணித்தப் பின்பும் ஒ.பன்னீர் செல்வம் முதலமைச்சராகவும், அதிமுகவை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த சசிகலா இசைவு அளித்ததையும் நாம் மறக்க முடியாது.
ஆனால் ஏதோ ஒரு கட்டத்தில் ஒ. பன்னீர் செல்வம், சசிகலாவை விட தங்களுக்கு இசைந்து போவார் என்று மோடி அரசு அவருக்கு மறைமுக ஆதரவு தர ஆரம்பித்துள்ளது. அதன் விளைவாகத் தான் அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றுகூடி சசிகலா சட்டமன்றக் குழுத் தலைவராக தேர்ந்தெடுத்தும் கூட தமிழக ஆளுநர் வித்யா சாகர் ராவ் தமிழகத்திற்கு வருவதை காலந்தாழ்த்தி வந்தார்.
இந்தியாவில் உள்ள முக்கிய மாநிலங்களில் ஒன்றான தமிழகத்திற்கு கடந்த ஐந்து மாதங்களாக ஒரு நிரந்தரமாக ஆளுநர் நியமிக்கப்படவில்லை. அப்படி நியமிப்பதற்கு . பன்னீர் செல்வம், சசிகலா ஆகியோர் எவ்விதக் கோரிக்கையையும் மத்திய அரசிடம் வைக்கவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.
ஒ. பன்னீர் செல்வம் மவுனத்தை கலைத்து குமுறியதற்கு திமுகவின் பங்கு உள்ளது என்று சசிகலா பழிசொல்லி இருப்பது நகைப்பிற்குரியது. பன்னீர்செல்வம் அவர்களது தைரியத்திற்கு பின்னணியில் பிரதமர் மோடி இருப்பது தெளிவாக தெரிந்தும் பாஜக மீது பழி சுமத்தாமல் திமுக மீது சசிகலா பழி சுமத்தியிருப்பதின் மர்மம் என்ன? தமிழகத்தில் புறவாசல் வழியாக பாஜக தனது ஆதிக்கத்தை செலுத்துவதற்கு முதலில் தீபா தற்போது பன்னீர்செல்வம் என அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்தி அதன் கட்டுக்கோப்பை சிதைத்து வருகின்றது என்பது ஊர் அறிந்த ரகசியம்.
தற்போதைய சூழலில் ஒ. பன்னீர் செல்வம் தனது கையில் எடுத்துள்ள மத்திய பாஜக, அவருக்கு சட்டமன்ற உறுப்பினர்களில் ஆதரவு இல்லாத நிலை ஏற்பட்டால் சசிகலா ஆதரிக்க முன்வரும். ஏனெனில் மத்தியில் ஆட்சியை நடத்துவதற்கும், ஜீலையில் நடைபெறும் குடியரசு தலைவர் தேர்தலில் தனது வேட்பாளருக்கு அதிமுகவின் ஆதரவு தேவை. இதே போல் சசிகலாவிற்கு மத்திய பாஜக அரசின் தயவு தேவை. அதனால் தான் சசிகலா தனது வாசலை பாஜகவிற்கு திறந்து வைத்துள்ளார். இதன் காரணமாக தான் சசிகலா, பாஜக செய்துவரும் அரசியல் சித்து வேலைகளுக்கு அக்கட்சியின் மீது பழிசொல்லாமல் திமுகவின் மீது அநியாயமாக பழிசொல்லியுள்ளார்.
வறட்சி, காவிரி பிரச்னை, பவானியின் குறுக்கே கேரளா அணை, விவசாயிகள் தற்கொலை, குடிநீர் பஞ்சம், மீனவர் வாழ்வாதாரம், நிதி நெருக்கடி உள்ளிட்ட பல பிரச்சினைகளை எதிர்கொண்டிருக்கும் தமிழகத்தில் ஒரு நிலையற்ற அரசு எந்தவித நன்மையும் கொடுக்காது. தமிழகம் ஒரு அரசியல் மாற்றத்திற்கு தயாராகிக் கொண்டிருக்கிறது. அந்த மாற்றம் ஒரு வெளிப்படையான மாற்றமாகவும், தமிழகத்திற்கு பலன் தரக்கூடிய மாற்றமாகவும் இருக்கவேண்டும் என்பது தான் தமிழர்களின் எதிர்பார்ப்பு. இவ்வாறு அந்த அறிக்கையில் ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.