மெரினா வன்முறைக்கு ஸ்டாலின் காரணம்... நடராஜன் பேச்சின் பரபர பின்னணி
சென்னை வன்முறைக்கே ஸ்டாலின்தான் காரணம் என சசிகலா கணவர் நடராஜன் சாடியுள்ளார். ஸ்டாலினுடன் நெருக்கமாக இருக்கும் முதல்வர் ஓபிஎஸ்க்கு செக் வைக்கதான் இந்த பரபரப்பை கிளப்பினராம் நடராஜன்.
சென்னை: சென்னை மெரினா புரட்சியில் ஏற்பட்ட வன்முறைக்கே திமுக செயல் தலைவர் ஸ்டாலின்தான் காரணம் என அதிமுக பொதுச்செயலர் சசிகலாவின் கணவர் நடராஜன் பகிரங்கமாக குற்றம்சாட்டியிருப்பது முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தரப்பை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், மத்திய அரசின் ஆதரவுடன் தன்னிச்சையாக செயல்பட்டு வருகிறார். முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு மறைமுகமாக ஆதரவு தருமாறு ஸ்டாலின் தரப்புக்கும் மத்திய அரசு நெருக்கடி கொடுத்து வருவதாக தொடர்ந்து செய்திகள் வெளியாகி வந்தன.
இதனால்தான் ஜல்லிக்கட்டு புரட்சியில் வரலாறு காணாத வன்முறை ஏற்பட்ட நிலையிலும் கூட குடியரசு தின நிகழ்ச்சியில் ஸ்டாலின் கலந்து கொண்டார்; சட்டசபையில் தமிழக அரசை கண்டிப்பது போல் கண்டித்தாலும் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு நன்றி தெரிவித்திருந்தார் ஸ்டாலின்.
போலீஸை தூண்டியது யார்?
ஸ்டாலினுடனான முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் இந்த நெருக்கத்தால் மன்னார்குடி தரப்பு கடும் அதிர்ச்சியில் இருந்தது. அத்துடன் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு கெட்ட பெயரை ஏற்படுத்த மன்னார்குடி கோஷ்டிதான் சென்னை ஜல்லிக்கட்டு புரட்சியில் மாணவர்கள் மீது போலீசாரை ஏவிவிட்டதாக ஊடகங்கள், அரசியல் தலைவர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர்.
நடராஜன் பிரஸ் மீட்
இது தொடர்பான ஆதாரங்கள் என சமூக வலைதளங்களிலும் உறுதப்படுத்த முடியாத படங்கள் பரவி வருகின்றன. இந்த நிலையில் புதுக்கோட்டையில் திடீரென செய்தியாளர்களை சந்தித்தார் சசிகலாவின் கணவர் நடராஜன்.
ஸ்டாலின் மீது பாய்ச்சல்
அப்போது சென்னை வன்முறைக்கே ஸ்டாலின்தான் காரணம் என பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார். ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுக தரப்பில் இருந்து திமுக மீது வெளிப்படையான பகிரங்க விமர்சனங்கள் எதுவும் முன்வைக்கப்படவில்லை.
ஓபிஎஸ்-க்கு செக்
சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலராக பதவியேற்ற சசிகலா கூட, தங்களுக்கு எதிரான கட்சி என்றே குறிப்பிட்டாரே தவிர திமுக அல்லது பாஜக என பெயர் குறிப்பிடாமல் இருந்தார். தற்போது ஸ்டாலினுடன் நெருக்கம் காட்டும் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு செக் வைக்க வேண்டும் என்பதற்காகவே திமுக மீது பாய்ச்சலைக் காடியுள்ளார் நடராசன் என்கின்றன அதிமுக வட்டாரங்கள்.