அதிமுக பொதுச்செயலராக தம்பிதுரையை நிறுத்த சசிகலா தயங்குவது ஏன்? பரபர தகவல்கள்
சென்னை: அதிமுக பொதுச்செயலராக தம்பிதுரையை நிறுத்த சசிகலா தயங்குவது குறித்து புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து அதிமுகவின் அடுத்த பொதுச்செயலர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அதிமுகவில் எம்ஜிஆர் காலத்தில் நிரந்தர பொதுச்செயலர் என்று யாரும் இருந்தது இல்லை.
புதிய பொதுச்செயலர்
ஆனால் ஜெயலலிதா தலைமையிலான அதிமுகவில் அவர்தான் நிரந்தர பொதுச்செயலராக இருந்து வந்தார். தற்போது ஜெயலலிதா காலமாகிவிட்ட நிலையில் புதிய பொதுச்செயலர் நியமிக்கப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
மதுசூதனனுக்கு எதிர்ப்பு
தற்போது அதிமுகவை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் சசிகலா தரப்பு தங்களுக்கு இணக்கமாக நடந்து கொள்ளக் கூடிய மதுசூதன் போன்ற ஒருவரையே பொதுச்செயலராக்க விரும்புகிறது. ஆனால் அது கட்சியின் இமேஜை மோசமாக பாதிக்கும் எனவும் ஒரு கருத்து முன்வைக்கப்படுகிறது.
தம்பிதுரை
இதனால் லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரையின் பெயரும் பொதுச்செயலர் பதவிக்கு அடிபடுகிறது. இருந்தபோதும் தம்பிதுரை மீது பாஜக ஆதரவாளர் என்ற சந்தேகப் பார்வை சசிகலா தரப்புக்கு இருந்து வருகிறது.
லாபிகள்..
அதே நேரத்தில் தம்பிதுரையை பொதுச்செயலராக்குவதன் மூலம் டெல்லி லாபிகளுக்கு வேறு கட்சித் தலைவர்களை நம்பி இருக்கத் தேவையில்லை என்ற கருத்தும் சசிகலா முகாமில் விவாதிக்கப்படுகிறது. இதனிடையே ஓபிஎஸ் அணியும் அடுத்த பொதுச்செயலராக யாரை முன்னிறுத்தலாம் என்பது குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறது.