இதயமே நொறுங்குவது போல உள்ளது.. கமலைப் பிரிந்து உருகிய கெளதமி #Gautami
சென்னை: 13 ஆண்டு காலமாக ஒன்றாக சேர்ந்து வாழ்ந்த கௌதமி ஏன் கமலஹாசனை விட்டு பிரிந்தார் என்பது தொடர்பான அவர் அளித்துள்ள விளக்கம்.
இதுதொடர்பாக கௌதமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கமலஹாசனிடம் இருந்து பிரியும் முடிவு மிக துயரமானது. 13 ஆண்டு கால வாழ்க்கைக்கு பின்னர், பெரும் வேதனையுடன் இந்த முடிவை எடுத்துள்ளேன். நல்ல உறவில் பிரிவு தொடர்பான முடிவை எடுப்பது எளிதான விஷயமல்ல. நமது வாழ்கையை முன்னோக்கி நகர்த்தி செல்ல ஒன்று தனது கனவுகளை சமரசம் செய்து கொள்ள வேண்டும், இல்லை என்றால் தனியாக வாழும் சாத்தியத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும். நீண்ட நாள் போராட்டத்திற்கு பின்னரே இந்த முடிவை நான் எடுத்துள்ளேன்.
இந்த முடிவை ஏதோ அனுதாபத்தை தேட நான் எடுக்கவில்லை. வாழ்க்கை பல்வேறு மாற்றத்திற்கு உட்பட்டது என்பது எனக்கு புரியும். என் வாழ்க்கையில் எடுத்த மிகவும் கடிமான முடிவுகளில் இது ஒன்று. முதலில் நான் ஒரு தாய். என் மகளுக்கு சிறந்த தாயாக இருக்கும் பொறுப்பு எனக்கு இருக்கிறது. என் மகளுக்காகவே இந்த முடிவை எடுத்திருக்கிறேன்.
இதில் ரகசியம் எதுவும் இல்லை. நான் திரைப்படத் துறைக்கு வருவதற்கு முன்பிருந்தே கமலஹாசனின் ரசிகை. அதை அப்படியே தொடர்வேன். தொடர்ந்து கமலுக்கு ரசிகையாக இருந்து அவர் புரியும் சாதனைக்கு கை தட்ட காத்திருக்கிறேன். திரைத்துறையில் பல விஷயங்கை நான் கமலிடம் இருந்து கற்றுக் கொண்டேன்.
29 ஆண்டு கால நட்பில் கமலிடம் இருந்து அன்பையும் ஆதரவையும் பெற்றுள்ளேன். மேலும், வலி மிகுந்த என்னுடைய வாழ்க்கையில் பக்கபலமாக கமல் இருந்து வந்ததற்கு கௌதமி நன்றிகளையும் தெரிவித்துள்ளார்.