சுமார் 1000 ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை உருவாக்கிய சங்கர் தற்கொலையா? நம்ப முடியவில்லையே
Recommended Video
சென்னை: 900 சிவில் சர்வீஸ் வெற்றியாளர்களை உருவாக்கிய சங்கர் அகாடமி தலைவர் சங்கர் ஏன் தற்கொலை செய்தார் என்பது மிகவும் ஆச்சரியப்படத்தக்கதாக உள்ளது.
2004ம் ஆண்டு, சங்கர் ஐஏஎஸ் அகாடமியை உருவாக்கினார். மிகவும் சாதாரண குடும்பத்திலிருந்து மேலே வந்து அகாடமி தொடங்கிய சாதனையாளர்.
900த்திற்கும் மேற்பட்ட சிவில் சர்வீஸ் பணியாளர்களை உருவாக்கியவர் சங்கர். எனவே இவரா இப்படி முடிவெடுத்தார் என்பதை நம்ப முடியவில்லை என்று அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கிறார்கள்.
[14 ஆண்டு சேவை.. விவசாய குடும்பத்தில் பிறந்து பல ஐஏஎஸ்களை உருவாக்கியவர்.. சங்கர் தற்கொலை!]
உழைத்து முன்னேறினார்
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகேயுள்ள, நல்லாகவுண்டம்பாளையம் என்ற சிறு கிராமத்தில் விவசாய குடும்பத்தில் பிறந்தவர். 30 வயதாக இருக்கும்போது சிவில் சர்வீஸ் தேர்வு எழுத முயன்றுள்ளார். ஆனால் வயது மூப்பை காரணம் காட்டி அவர் சிவில் கல்வி பயில முடியாமல் போனது. இதன்பிறகு 36 மாணவர்களுடன் ஐஏஎஸ் அகாடமியை துவங்கினார். இப்போது 1500 மாணவர்களுக்கும் மேல் அங்கு கல்வி பயில்கிறார்கள். இப்படி உழைத்து முன்னேறியவர் எளிதாக எப்படி மனமுடைந்திருப்பார் என்ற சந்தேகம் ஏற்படுகிறது.
குடும்ப உறுப்பினர்கள்
குடும்ப பிரச்சினையால் சங்கர் தூக்குப்போட்டு, தற்கொலை செய்ததாக கூறப்படுகிறது. சம்பவம் நடந்தபோது, அவரது உடன் இருந்த மனைவியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். சங்கர் சகோதரி, ஒடிசாவில் ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இதேபோல தோழர்கள் மற்றும் நெருக்கமானவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தென் இந்தியா நோக்கி
ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி பெறுவோர் வட மாநிலங்களை சேர்ந்தவர்கள்தான் என்ற பொதுக்கருத்தை மாற்ற சங்கர் ஐஏஎஸ் அகாடமி உதவியது. டெல்லியிலிருந்து, தென் இந்தியா நோக்கி, ஐஏஎஸ் கனவை திரும்பி பார்க்க வைத்தவர் சங்கர். ஆனால், அவரது வாழ்க்கை கனவு கலைந்து போனது என்பதை யாராலும் நம்ப முடியவில்லை.
பல அதிகாரிகளை உருவாக்கியவர்
சென்னை அண்ணாநகரில் 2 வருடங்கள் முன்பாக பெரிய அளவில் விரிவுபடுத்தி அகாடமி துவக்கினார். மதுரை, திருச்சி, சேலம் ஆகியவற்றில் டிஎன்பிசி தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கவும் கல்வி கூடங்களை நடத்தி வந்தார் சங்கர். பெங்களூர் உள்ளிட்ட அண்டை மாநில நகரங்களிலும் கிளைகள் உள்ளன. பல ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை உருவாக்கியவர் சங்கர் என்பதால் அதிகாரிகள் பலரும் சங்கர் இறுதி சடங்கில் பங்கேற்க உள்ளனர்.