பிளஸ் 1 மாணவனை படிக்கச் சொன்ன ஹெட்மாஸ்டருக்கு கத்திக்குத்து... எங்கே போகிறது மாணவ சமுதாயம்?
வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் பிளஸ் 1 மாணவனை படிக்கச் சொன்ன தலைமை ஆசிரியருக்கு கத்திக்குத்து விழுந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
Recommended Video
திருப்பத்தூர் : வேலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் பள்ளியில் பிளஸ் 1 மாணவனை படிக்கச் சொன்னதால் அந்த மாணவன் ஆத்திரித்தில் தலைமை ஆசிரியரை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடியுள்ளான். கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள் மீதே தாக்குதல்களை நடத்தும் இந்த மாணவ சமுதாயத்தின் அவல நிலைக்கு யார் காரணம்?
வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் செயல்பட்டு வருகிறது அரசு உதவி பெறும் ராமகிருஷ்ணா பள்ளி, இந்தப் பள்ளியில் 52 வயது பாபு தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். பிளஸ் 1 மாணவர்கள் 5 பேர் சரிவர படிக்காததால் அவர்களை தனது அறைக்கு அருகில் வந்து அமர்ந்து படிக்குமாறு பாபு கூறியுள்ளார். வகுப்பாசிரியர் இல்லாததால் தனது அறைக்கு அருகில் வந்து படிக்குமாறு தலைமை ஆசிரியர் கூறியுள்ளதாக தெரிகிறது. ஆனால் மாணவர்கள் வராத நிலையில் அதற்கான விளக்கம் கேட்டுள்ளார். அப்போது மாணவன் ஒருவன் தலைமைஆசிரியரை தாக்கியதாக போலீசார் கூறுகின்றனர்
பாபுவின் வயிற்றில் கத்தியால் குத்தியதில் அவர் நிலை குலைந்து கீழே விழுந்துள்ளார். இதனையடுத்து மாணவன் அங்கிருந்து தப்பியோடியுள்ளான், கத்திக் குத்து காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்த தலைமை ஆசிரியரை பள்ளியில் பணியாற்றியவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
தலைமை ஆசிரியரை தாக்கிய மாணவன்
கத்தி ஆழமாக பதிந்ததில் பாபுவின் குடல் பகுதியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது, அறுவை சிகிச்சைக்குப் பின்னர் அவர் அபாய கட்டத்தைத் தாண்டியுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். எனினும் அவருக்கு காது பகுதியிலும் கத்திக்குத்து காயம் ஏற்பட்டுள்ளது. தலைமை ஆசிரியரை கத்தியால் குத்திய மாணவன் இரவு காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளான்.
2வது சம்பவம்
வேதியியல் தேர்வின் போது மாணவர் ஒருவர் காப்பியடித்ததை கண்டித்ததால் பாபு மீது ஏற்கனவே ஒரு முறை தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. அந்த சம்பவத்தின் போது தலைமை ஆசிரியர் பாபு சிறிய காயங்களுடன் தப்பித்தார்.
கவலையளிக்கும் விஷயம்
பள்ளி காலத்தில் மாணவர்களை செதுக்கும் சிற்பிகளாக ஆசிரியர்கள் இருக்கின்றனர். ஆசிரியர்களின் திட்டுகளுக்கு பணிந்து படிப்பில் சிறந்த மாணவர்கள் இன்று சமுதாயத்தில் நல்ல அந்தஸ்த்தில் இருக்கின்றனர். ஆனால் ஆசிரியர்களின் அறிவுரைகளை கேட்கும் பொறுமை கூட இன்றைய மாணவ சமுதாயத்திற்கு இல்லையே என்பது கவலையளிக்கும் விஷயமாக இருக்கிறது.
பள்ளி பருவத்திலேயே கத்தி எடுக்கும் மனநிலை
மாணவர்களின் இந்த மனநிலைக்கு நம்முடைய அவசரகதியிலான வாழ்க்கையும், குடும்பத்தார் மற்றும் சுற்றுப்புறத்தாரின் புறக்கணிப்பும் கூட காரணம் என்று சொல்லலாம். கிராமப்புறங்களில் எல்லாம் யார் வீட்டு பிள்ளையாக இருந்தாலும் அவர்கள் தவறு செய்தால் கண்டிக்கும் பழக்கம் எல்லோருக்கும் உண்டு. ஆனால் இன்று உறவுகள் சுருங்கியது போல அனைவரின் மனங்களும் சுருங்கியதன் வெளிப்பாடே மாணவர்கள் பள்ளி படிக்கும் போதே கையில் கத்தி எடுத்து பழகுகின்றனர்.
மாணவர்களுடன் கலந்து பேசுங்கள்
அண்மையில் சென்னையில் ஓடும் ரயிலில் கல்லூரி மாணவர்கள் பட்டாக்கத்தியுடன் வந்த சம்பவம் எப்படி அதிர்வலைகளை ஏற்படுத்தியதோ அதே போன்று தான் இருக்கிறது சமீப காலமாக அரங்கேறி வரும் மாணவர் - ஆசிரியர் இடையேயான மோதல்களும். பெற்றோரே பணம் சம்பாதித்து அன்றாட பிரச்னைகளை சமாளிப்பது மட்டும் வாழ்க்கையல்ல, உங்களின் பிள்ளைகள் மனதில் என்ன இருக்கிறது, அவர்கள் நல்ல சமுதாயத்தை உருவாக்குபவர்களாக வளர்கிறார்களா என்பதை கண்டறிவதும் உங்களின் கடமையே. பிஞ்சு வயதிலேயே மனதில் நஞ்சை புகுத்திக் கொள்ளும் இளம் தலைமுறையினரை நல்வழிப்படுத்தும் பொறுப்பு அனைவருக்குமே உள்ளது, அதற்கான மருந்து அவர்களுடன் நேரத்தை செலவிடுவதைத் தவிர வேறெதுவுமில்லை.