ரயில் பயணச்சீட்டில் தமிழ் கொண்டு வந்தது சரி, ஹைகோர்ட்டிலும் கொண்டு வரலாமே?
ரயில் பயணச்சீட்டுகளில் தமிழ் மொழியை கொண்டு வந்து கோபத்தில் இருக்கும் தமிழர்களை தணிக்க நினைக்கிறதா மத்திய அரசு.
சென்னை : ரயில் பயணச்சீட்டில் ஆங்கிலம், இந்திக்கு அடுத்தபடியாக தமிழ் மொழியை அச்சிட்டு வழங்கும் நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. அண்மைக்காலமாக இந்தி அனைத்திலும் கோலோச்சிய நிலையில் பிராந்திய மொழிகளுக்கு மத்திய அரசு திடீரென முக்கியத்துவம் அளிப்பது ஏன் என்ற கேள்வி அனைவருக்கும் எழுந்துள்ளது.
கடந்த 4 ஆண்டு பாஜக ஆட்சியில் அனைத்தையும் காவிமயத்திற்கு மாற்றும் முயற்சிகள் ஜரூராக நடந்தன. இந்துத்துவா கொள்கைகளை பரப்புவது மக்கள் மீது இந்தியை திணிப்பது என்று பல கூத்துகள் அரங்கேறின. தமிழகத்தில் இந்தி மொழியை மீண்டும் புகுத்தும் விதத்தில் மைல்கற்கள், மெட்ரோ ரயில் நிலையங்களில் இந்தி வாசகங்கள் இடம்பெற்றன.
இதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில் இந்தி திணிப்பு என்பது முறியடிக்கப்பட்டது. மெட்ரோ ரயில் நிலையத்தில் இந்தி இடம்பெற்றதற்கு முதன்முதலில் கண்டனம் தெரிவித்து கன்னடர்கள் போராடினார்கள் இதனால் அங்கிருந்தும் இந்தி விரட்டியடிக்கப்பட்டது.
|
கன்னட மொழியில் டிக்கெட்
இந்நிலையில் இந்திய ரயில்வே பெங்களூரில் கடந்த மார்ச் மாதத்தில் ரயில் பயண டிக்கெட்டுகளில் பிராந்திய மொழியில் பயணச்சீட்டில் பயண விவரம் அச்சிட்டு அளிக்கும் முறையை அறிமுகம் செய்தது. இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த கன்னடர்களுக்கு இது மிகப்பெரும் வெற்றியாக அமைந்தது, மற்றொருபுறம் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலும் ஒரு காரணம் என்று சொல்லப்படுகிறது.
கோபத்தை தணிக்கவா
கர்நாடகாவிற்கு அடுத்தபடியாக மத்திய அரசுக்கு எதிராக கொந்தளிப்பில் இருப்பது தமிழகம். காவிரி விவகாரம், இந்தி மொழி திணிப்பு என்று மத்திய அரசு மீது தாறுமாறான கோபத்தில் இருக்கும் தமிழக மக்களை தணிக்க இன்று முதல் ரயில் பயணச்சீட்டில் தமிழ் மொழியில் பயண விவரம் அச்சிட்டு வழங்கப்படுகிறது. இது எதிர்வரும் பொதுத்தேர்தலை மனதில் வைத்து நடந்ததா அல்லது விரைவில் ஏதேனும் தேர்தல் வர உள்ளதா என்ற சந்தேகத்தைத் தான் ஏற்படுத்தியுள்ளது.
திடீர் மாற்றத்திற்கு காரணம் என்ன?
ரயில்வேயில் நவீனமயமாக்க எத்தனையோ விஷயங்கள் இருக்கிறது. திடீரென ரயில்வே அமைச்சகம் மாநில மொழிகளில் பயண விவரத்தை அச்சிட்டு விநியோகிக்கும் முறையை கொண்டு வந்தது ஏன் இதில் ஏதேனும் உள்நோக்கம் இருக்கிறதா என்பதெல்லாம் புரியாத புதிராகவே இருக்கிறது.
நீதிமன்ற வழக்காடு மொழியாக்கலாமே
உண்மையிலேயே மக்கள் பயன்பெற வேண்டும் என்பதற்காகத் தான் ரயில் டிக்கெட்டுகளில் தமிழில் விவரம் அச்சடிக்கப்படுகிறது என்றால் தமிழக மக்களின் நீண்டநாள் கோரிக்கையான சென்னை உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக தமிழை அறிவிக்க வேண்டும் என்பதையும் மத்திய அரசு நிறைவேற்றலாமே. இதுவும் மக்களுக்கு பயன் அளிக்கக் கூடிய விஷயம் தான், இதனால் தங்களுக்கான நீதி எப்படி கிடைக்கிறது என்பதை நேரடியாக உணர முடியுமே, இதையும் செய்யலாமே மத்திய அரசு.