ஜெயேந்திரரிடம் தினகரன் கேட்ட 4 'வரங்கள்'.. காஞ்சி மடத்தில் நடந்தது என்ன?
''முன்பு நடந்ததை மறந்துவிடுங்கள். இப்போது நடப்பது உங்களின் வழிகாட்டுதலில் நடக்கும் ஆட்சி" என்று ஜெயேந்திரரிடம் ஒரே போடாக போட்டாராம் தினகரன்.
சென்னை: அன்றொரு நாள் தீபாவளி நாளில், கொலை வழக்குக்காக காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளை ஜெயலலிதா கைது செய்து சிறையில் அடைத்தபோது, நாடே திடுக்கிட்டு தமிழகத்தை திரும்பி பார்த்தது. இன்று அதே காஞ்சி மடத்தில் ஜெயலலிதா வளர்த்து விட்டுச் சென்ற அதிமுகவின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் சரண் அடைந்துள்ளார்.
மத்திய அரசின் சஸ்பென்ஸ் நடவடிக்கைகள் ஒரு பக்கம் என்றால் ஜெயலலிதாவின் மரணத்தில் சர்ச்சை கிளப்பும் எதிர்க்கட்சிகள், சிறை சென்றுவிட்ட சசிகலா, தினகரனை மிரட்டும் அந்நிய செலாவணி என பல புறங்களில் இருந்தும் தாக்கும் ஏவுகணைகளில் இருந்து தப்பிக்கவே தினகரன் காஞ்சி மடத்தில் தஞ்சம் அடைந்ததாக கூறப்படுகிறது.
தினகரன் அதிமுக கொடியோ வேறு எந்த அடையாளங்களோ இல்லாமல் தனது காரில் தனிப் பாதுகாப்பு அதிகாரிகள் இருவருடன் காஞ்சி சங்கர மடத்துக்குக் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. கட்சியின் மாவட்ட பிரமுகர்களுக்குக்கூட இவ்விஷயம் தெரிவிக்கப்படாமல் இருந்ததாம்.
ரகசிய பேச்சுவார்த்தை
ஜெயேந்திரருடன் எப்போதும் இருக்கும் உதவியாளர்கள்கூட இந்தச் சந்திப்பின்போது வெளியே அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது. 24 மணிநேரமும் அவருடன் இருப்பதற்காக பணிக்கப்பட்டுள்ள சுப்பிரமணியன் என்ற மருத்துவர் மட்டுமே சங்கராச்சாரியாருடன் இருந்தாராம். ஆனால் பேசுவது கேட்க முடியாத அளவுக்கு தூரத்தில் அவர் அமர வைக்கப்பட்டாராம்.
2 மணி நேர சந்திப்பு
சுமார் 2 மணி நேரம் சந்திப்பு நிகழ்ந்துள்ளது. முதலில் 40 நிமிடங்கள் ஜெயேந்திரருடன் நடத்தப்பட்ட ஆலோசனை பிறகு, விஜயேந்திரருடனும் தொடர்ந்ததாம். காஞ்சி மடத்துக்குள் வரும்போது இறுக்கமான மனநிலையுடன் வந்த தினகரன் வெளியேறும்போது உற்சாகமாக காணப்பட்டதாக தகவல் அறிந்தவர்கள் கூறுகிறார்கள்.
சசிகலாவுடன் நட்பு
போயஸ் தோட்டத்துக்கும் மடத்துக்குமான பூசல் ஜெயலலிதா மரணத்துக்குப்பிறகு ஒரு முடிவை எட்டியுள்ளது என்றே தெரிகிறது. காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம் கடந்த பிப்ரவரி 1ம் தேதி நடைபெற்றது. இதற்கான அழைப்பிதழை கோவில் நிர்வாக அதிகாரி நாராயணன் மற்றும் நிர்வாகிகள், சசிகலாவை போயஸ் கார்டனில் சந்தித்துக் கொடுத்தனர். அதுவே நட்புக்கான சமிக்ஞைதான் என்பதை சசிகலா உணர்ந்து கொண்டார். அவருக்கும் காஞ்சி மடத்தின் ஆதரவு ஆறுதலை தருவதாக இருந்துள்ளது.
சசிகலா அப்படியில்லை
எனவேதான் சசிகலா கோஷ்டியை சேர்ந்த அதிமுகவை சுற்றிலும் ஆபத்து சூழ்ந்துள்ள இந்த நிலையில், ஜெயேந்திரரை பார்த்து,
''கடந்த கால கசப்புகளை மறந்துவிடுங்கள்..." என கூறிவிட்டு வந்தாராம் தினகரன். ஜெயலலிதா ஏதோ ஓரு கோபத்தில், உங்கள் மீது எதிர்ப்பு காட்டிவிட்டார். எங்கள் சித்தி அப்படியில்லை" என கூறி ஜெயேந்திரரை சமாதானப்படுத்தினாராம் தினகரன்.
உங்கள் ஆட்சி இது
சசிகலா வெளியே இருந்திருந்தால் இப்போது உங்களிடம் ஓடி வந்து மன்னிப்பு கேட்டு பணிந்திருப்பார் என்று தினகரன் சொன்ன பிறகு ஜெயேந்திரர் முகத்தில் சாந்த புன்னகை தவழ்ந்துள்ளது. ''முன்பு நடந்ததை மறந்துவிடுங்கள். இப்போது நடப்பது உங்களின் வழிகாட்டுதலில் நடக்கும் ஆட்சி" என்று ஒரே போடாக போட்டாராம் தினகரன்.
நான்கு வரங்கள்
இதையடுத்து நான்கு வரங்களை (கோரிக்கைகள்) ஜெயேந்திரரிடம் கேட்டுள்ளார் தினகரன். பாஜகவால் தமிழக அரசுக்கு அச்சுறுத்தல் வரக்கூடாது, ஜெயலலிதாவின் நெருங்கிய பத்திரிகை நிறுவன நண்பருக்கு, நண்பரான பத்திரிகை ஆசிரியர் தொடர்ந்து அதிமுகவுக்கு எதிராக அதிலும் ஜெயலலிதா மரணம் குறித்து தொடர்ந்து எழுதக்கூடாது, திமுகவைவிட தமிழக பாஜகதான் அதிமுகவை அதிகம் விமர்சிப்பதால் அவர்களும் பேசாமல் இருக்க வேண்டும், தமிழகத்திற்கு தங்களோடு இணக்கமாக இருக்க கூடிய ஆளுநரை நியமனம் செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகள் வைக்கப்பட்டதாம்.
குங்கும ஆசி
கோரிக்கைகளை கேட்டபடி மவுனமாக யோசித்தபடி இருந்தாராம் ஜெயேந்திரர். பிறகு ஒரு முடிவுக்கு வந்தவரை போல முகம் பிரகாசம் ஆனதாம்.தினகரன் கிளம்பும்போது அவரது நெற்றியில், ஜெயேந்திர சரஸ்வதி சாமிகள், குங்குமம் வைத்து அனுப்பியதாக கூறப்படுகிறது. எனவே தினகரன் கோரிக்கைகளில் பெரும்பாலானவை நிறைவேறிவிட்ட மாதிரிதான் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.