நீட் தேர்வுக்கு தமிழகம் மட்டும் ஏன் விலக்கு கேட்கிறது.. நீதிபதி கிருபாகரன் சரமாரி கேள்வி
நீட் தேர்வில் இருந்து தமிழகம் ஏன் விலக்கு கேட்கிறது என்று நீதிபதி கிருபாகரன் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை: இந்திய அளவில் நடைபெறும் நீட் தேர்வை தமிழகம் ஏற்காவிட்டால் தமிழகத்தின் கல்வித்தரம் என்னவாகும் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்கள், இந்திய முழுவதும் நீட் தேர்வை எழுதி வெற்றி பெற்ற பின்னரே மருத்துவம் படிக்க முடியும் என்றும் மத்தியில் ஆளும் பாஜக அரசு சட்டம் கொண்டு வந்துள்ளது.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த தமிழகம் அரசு தமிழக மாணவர்களுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும் வகையில் சட்டம் இயற்றியது. அது ஜனாதிபதி ஒப்புதலுக்காக டெல்லி அனுப்பப்பட்டுள்ளது.
அரசு ஒதுக்கீட்டு இடங்கள்
இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தை சார்ந்த வித்யா ஷரோன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அவர் அளித்த மனுவில் தனியார் மற்றும் சிறுபான்மையினர் நடத்தும் மருத்துவ கல்லூரிகள் தங்களிடம் உள்ள 50 சதவீத அரசு ஒதுக்கீட்டு இடங்களை அரசிற்கு வழங்காமல் தாங்களாகவே நிரம்பி கொள்கிறார்கள் என்றும் அதனால் தன்னை போன்ற மாணவர்கள் பாதிக்கப்படுவதாக கூறியிருந்தார். மேலும், தனியார் மருத்துவ கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களை முறையாக தமிழக அரசுக்கு அளிக்க தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.
விதிகள் என்ன ஆச்சி?
இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, 50 சதவீத அரசு இடங்கள் தமிழக அரசுக்கு வழங்குவது குறித்து மருத்துவ கவுன்சில் விதிகளை பின்பற்றவில்லையா? என்று நீதிபதி கிருபாகரன் கேள்வி எழுப்பினார்.
நீட் குறித்து கேள்வி
மேலும் நீட் தேர்விலிருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிப்பது குறித்து நீதிபதி கிருபாகரன் கேள்வி எழுப்பினர். கிராமப் புற மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று கூறி நீட் தேர்வில் இருந்து விலக்கி வைப்பது மாணவர்களின் தரம் தாழ்ந்து போகாதா என்றும் கேள்வி கேட்ட நீதிபதி, மற்ற மாநிலங்களை விட தமிழகத்தின் கல்வி தரமாக இல்லை என்றார்.
மருத்துவ கவுன்சிலுக்கு நோட்டீஸ்
மேலும் தமிழகத்தில் உள்ள அரசு, தனியார் மற்றும் நிகர்நிலை பல்கலைகழகங்களில் மருத்துவ படிப்புக்கு எத்தனை இடங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளன? அதை போல 2016-17ம் கல்வியாண்டில் எத்தனை
மருத்துவ இடங்கள் நிரப்பப்பட்டன? என்பது குறித்து இந்திய மருத்துவ கவுன்சில் பதிலளிக்க வேண்டும் என்றும் கிருபாகரன் உத்தரவிட்டார்.
தமிழக அரசுக்கு நோட்டீஸ்
இது தவிர, மருத்துவ கவுன்சில் விதிகளின்படி தனியார் மருத்துவ கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள் அரசுக்கு வழங்கப்படுகிறதா? அங்கு தகுதி அடிப்படையில் இடங்கள் நிரப்ப வேண்டும் என்ற விதிகள் பின் பற்றப்பட்டதா? தமிழக அரசு தனியார் கல்லூரிகளிடம் இருந்து பெறப்பட்ட அரசு ஒதுக்கீட்டு இடங்கள் எத்தனை என்பது குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசு, நிகர்நிலை பல்கலைக்கழகங்கள், தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.