சமூக வலைத்தளங்களில் தமிழர்களின் விமர்சனம் கீழ்த்தரமாக இருக்கிறது... - ரஜினி ஆதங்கம் : வீடியோ
நடிகர் ரஜினிகாந்த, அரசியலுக்கு வருவேன் என கூறியதை சிலர் முகநூல், டுவிட்டரில் மிக கீழ்த்தரமாக எழுதியுள்ளதாகவும், தமிழர்கள் கீழ்த்தரமான வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார்கள் எனவும் ஆதங்கத்துடன் கேட்டுள்ளார
சென்னை: தமிழர்கள் ஏன் இவ்வளவு கீழ்த்தரமாக சமுக வலைதளங்களில் எழுதுகிறார்கள்? ஆனால் அதற்கெல்லாம் வருத்தப்படுவது கிடையாது. அந்த வார்த்தைகளெல்லாம் வளர்ச்சிக்கு உதவும் உரம் போன்றவை என நடிகர் ரஜினிகாந்த் சென்னை கோடம்பாக்கம் ராகவேந்திரா மண்டத்தில் நடைபெற்று வரும் ரசிகர்கள் சந்திப்புக் கூட்டத்தில் கூறியுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த கடந்த நான்கு நாட்களாக தனது ரசிகர்களை சந்தித்து வருகிறார். மாவட்ட வாரியாக 200 ரசிகர் என தினம் 600 ரசிகர்களுடன்புகைப்படம் எடுத்து வருகிறார். முதல் நாள் ரசிகர்கள் சந்திப்பில் அவர் அரசியலுக்கு வருவது ஆண்டவன் கையில் உள்ளது என கூறியது சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.
இதுகுறித்து இன்றைய ரசிகர்கள் கூட்டத்தில் அவர் கூறியதாவது: ''நான் முதல் நாள் கூட்டத்தில் அரசியலுக்கு வருவது பற்றியும் ரசிகர்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பது குறித்தும் பேசியிருந்தேன். அந்தப் பேச்சு குறித்து டுவிட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட இணைய தளங்களில் கடுமையாக பலர் விமர்சித்திருந்தனர். விமர்சனம் வேண்டாம் என கூறவில்லை. ஆனால் தமிழர்கள் ஏன் இவ்வளவு கீழ்த்தரமாக இருக்கிறார்கள்... வார்த்தைகளைப் பயன்படுத்துவதில்.
என்னை தமிழனாக்கியது நீங்கள்தான்!
முதலில் நான் ஒரு விஷயத்தை விளக்க வேண்டியது உள்ளது. நான் தமிழனா என கேள்வி கேட்கின்றனர். எனக்கு இப்போது 67 வயதாகிறது. என் 23 வயது வரைதான் நான் கர்நாடகாவில் இருந்தேன். 44 வருடங்கள் நான் தமிழ்நாட்டில் உங்களோடுதான் இருக்கிறேன். உங்கள் கூடவே வளர்ந்தேன். கர்நாடகாவில் இருந்து ஒரு கர்நாடகாவைச் சேர்ந்தவனாகவோ அல்லது மராத்தியனாகவோ வந்திருந்தால் நீங்கள் என்னை ஆதரித்து பேரும் புகழும் பணமும் அள்ளிக் கொடுத்து, என்னை நீங்கதான் தமிழனாகவே ஆக்கிவிட்டீர்கள்.
நான் பச்சைத் தமிழன்
நான் பச்சைத் தமிழன். என் மூதாதையர்கள், என் அப்பா அனைவரும் கிருஷ்ணகிரி நாச்சிக்குப்பத்தில் பிறந்தவர்கள் என நான் ஏற்கனவே உங்களிடம் கூறியுள்ளேன். என்னை நீங்கள் வெளியே தூக்கிப்போட்டால் நான் வேறு எந்த மாநிலத்துக்கும் போக மாட்டேன். இமயமலையில் தான் விழுவேன். ஏனென்றால் நல்லவர்களான தமிழர்கள் வாழும் இந்த மண்ணில் வாழ வேண்டும் அல்லது சித்தர்கள் வாழும் இமயமலையில் வாழ வேண்டும். நீங்கள் என்னை வாழ வைத்தவர்கள். என்னைப் போல் நீங்களும் நன்றாக இருக்க வேண்டும் என நினைப்பதில் என்ன தவறு? நான் எதையும் கரெக்ட் பண்ண நினைக்கக் கூடாதா?
முக. ஸ்டாலின், அன்புமணி, சீமான், திருமாவளவன்
மு.க ஸ்டாலின் என் நண்பர். அவரை ஃபிரியாக விட்டால் நன்றாக செயல்படுவார் என சோ.ராமசாமி சொல்வார். அன்புமணி ராமதாஸ் நன்கு படித்தவர். உலகமெல்லாம் சுற்றியவர். அவர் மாடர்னாக சிந்திக்கக் கூடியவர். திருமாவளவன் தலித்துகளுக்காக உழைத்துக்கொண்டிருக்கிறார் சீமான் ஒரு போராளி. அவருடைய சில கருத்துக்களை கேட்டு நான் பிரமித்து இருக்கிறேன்.
மாற்றம் வேண்டும்
இவர்கள் மட்டுமில்லாது தேசிய கட்சி தலைவர்கள் இருக்கிறார்கள். ஆனால், இங்கு ஜனநாயக சிஸ்டமே கெட்டுப் போயுள்ளது. அரசியல் குறித்து, ஜனநாயகம் குறித்து மக்களின் மனவோட்டமே மாறியுள்ளது. அதை மாற்ற வேண்டும். ஒரு மாற்றம் வேண்டும். அதை நாம் அனைவரும் சேர்ந்துதான் செய்ய வேண்டும்.
விமர்சனம் உரம் போன்றது
பேஸ்புக்கில் சிலர் விமர்சிக்கலாம். நிந்தனை செய்யலாம். திட்டலாம். ஆனால் ரசிகர்கள் அதற்கு மறுப்பு சொல்லக் கூடாது. காரணம் எதிர்த்தால் தான் வளர முடியும். உதாரணமாக ஒரு செடியை உருவாக்க குழிக்குள் விதை போட்டு மண்ணை அழுத்தி மூடி விடுகிறார்கள். உரம் போடுகிறார்கள். அந்த உரம் போன்றதுதான் இந்த திட்டு, நிந்தனைகளெல்லாம். அப்போதுதான் மேல வளர முடியும். அவர்களுக்கு தெரியாது, அவர்கள் நம்மை வளர்க்கிறார்கள் என்று.
போர் வரட்டும்...பார்க்கலாம்
எனக்கும் கடமை இருக்கிறது. தொழில் இருக்கிறது. உங்களுக்கும் தொழில், கடமை இருக்கிறது. ஊருக்குப் போங்கள். வேலையைப்பாருங்கள். போர் வரும்போது பார்ப்போம்''. இவ்வாறு ரஜினிகாந்த் அதிரடியாகப் பேசினார்.