தலித் வீட்டில் சாப்பாடு... அடுத்து திருட்டு விசிடி ஒழிப்பு... தமிழிசையின் தடாலடி பலன் தருமா?
சென்னை: ஆண்டில் ஒருமுறையாவது தலித் வீட்டில் சாப்பிடுவேன் என்று கூறிய தமிழிசை சௌந்தர்ராஜன், அடுத்து சினிமா பக்கம் திரும்பியுள்ளார்.
தமிழக அரசியலில் பாஜகவின் நிலை படு மோசமான நிலையில் உள்ளது. தடாலடியாக ஏதாவது செய்து மக்களின் கவனத்தைக் கவர்ந்து வரும் தேர்தல்களில் தமிழகத்தில் வலுவாகக் கால் ஊன்ற வேண்டும் என்று முனைப்பு காட்டி வருகின்றனர்.
இதை ஒரு அசைன்மென்டாகவே தமிழக பாஜகவினருக்கு தந்துள்ளார் பாஜகவின் தேசிய தலைவர் அமித்ஷா.
ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரானது பாஜக என்ற நினைப்பை மாற்ற வேண்டும். அடுத்து தமிழ் சினிமாவில் பிரபலங்களை பாஜக பக்கம் ஈர்க்க வேண்டும் என்பதுதான் இந்த அசைன்மென்டின் முக்கிய அம்சங்கள்.
ஏற்கெனவே தலித் வீட்டில் சாப்பிட்டு பப்ளிசிட்டியை ஆரம்பித்துவிட்ட தமிழிசை சௌந்தர்ராஜன் அடுத்து சினிமா பக்கம் திரும்பியுள்ளார்.
முதல் அஸ்திரமாக திருட்டு விசிடி ஒழிப்பைக் கையில் எடுத்துள்ளார். இது இன்றைய முக்கிய பிரச்சினையும் கூட.
தனது அறிக்கையில், "தமிழக அரசின் காவல்துறை இரும்புக்கரம் கொண்டு திருட்டு விசிடியை அடக்குவதுதான் சினிமா தொழிலை காப்பாற்றும்," என்று வலியுறுத்தியுள்ளார்.
அதிமுக, திமுக இரண்டிலுமே திரைப் பிரபலங்கள் இருந்தாலும், உண்மையில் சினிமாக்காரர்கள் அதிகம் உள்ள கட்சி பாஜகதான். இரண்டாம் நிலை நடிகர்கள், இயக்குநர்கள் பலர் இக்கட்சியில் கடந்த மூன்றாண்டுகளில் இணைந்துள்ளனர். இன்னும் சில முக்கிய பிரபலங்களை கட்சியில் சேர வைக்கும் முயற்சியாகவே இது பார்க்கப்படுகிறது.