ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இந்திய கடற்படை துப்பாக்கிச் சூடு... பாஜக மவுனம் காப்பது ஏன்?
ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இந்திய கடற்படையே துப்பாக்கிச் சூடு நடத்தி இருப்பது குறித்து பாஜகவை சேர்ந்த யாருமே வாய் திறக்காதது ஏன் என்ற கேள்வி எழுகிறது.
Recommended Video
ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் கடல்பகுதியில் மீனவர்கள் மீது இந்திய கடற்படையினரே துப்பாக்கிச் சூடு நடத்தி இருப்பது மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. எதற்கெடுத்தாலும் கண்டனம் தெரிவிக்கும் பாஜக துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கு மட்டும் ஏன் வாய் திறக்காமல் மவுனியாக இருக்கின்றனர்.
கடந்த திங்கட்கிமை மாலை 4 மணியளவில் ராமேஸ்வரத்தில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற மீனவர்களின் படகை இந்திய கடலோர காவல்படையினர் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும் கடலோர காவல் படையினர் ரப்பர் குண்டுகளை வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தியதில் பிச்சை என்ற மீனவருக்கும் ஜான்சன் என்ற மீனவருக்கும் கைகளில் படுகாயம் ஏற்பட்டது.
இந்திய கடலோர காவல்படையினரே தாக்குதல் நடத்தியதில் அதிர்ச்சியடைந்து கரை திரும்பிய பாதிக்கப்பட்ட மீனவர்கள் ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் இரட்டை மடி வலையை பயன்படுத்தியதால் மீனவர்களை கண்டித்தாகவும் அவர்கள் மீது தாக்குதல் எதுவும் நடத்தப்படவில்லை என்றும் இந்திய கடலோர காவல்படை விளக்கம் அளித்திருந்தது.
இல்லவே இல்லை என சாதித்தனர்
இதோடு நின்றுவிடாமல் அதிகாரிகள் சொன்ன விஷயம் பிரச்னையை திசை திருப்புவதற்காக மீனவர்கள் பொய் சொல்வதாகக் கூறி இருந்தனர். மேலும் இந்திய கடற்படை கப்பலில் ரப்பர் குண்டுகளே கிடையாது என்றும் சாதித்தனர்.
விசாரணைக்கு உத்தரவு
இந்திய கடற்படையின் தாக்குதலைக் கண்டித்து மீனவர்கள் போராட்டத்தில் இன்று முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் ராமேஸ்வரம் மண்டபம் பகுதியில் இன்று இந்திய கடலோர காவல்படைக்கும், மீனவ பிரதிநிதிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் தாக்குதல் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இந்தி பேசச்சொன்ன அதிகாரிகள்
மீனவர்கள் மீது இந்திய கடற்படையே தாக்குதல் நடத்தியது ஒரு அதிர்ச்சியான விஷயம் என்றால் மற்றொரு அதிர்ச்சியான விஷயம் தமிழ் மட்டுமே பேசத் தெரிந்த மீனவர்களை இந்தியில் பதிலளிக்கச் சொல்லி அடித்துள்ளனர். சொந்த நாட்டு மீனவர்களையே அடித்ததோடு தங்களின் மொழி வெறியையும் அவிழ்த்துவிட்டுள்ளனர் அதிகாரிகள். ஒருவேளை அவர்களை தமிழ் பேசச்சொல்லி இருந்தால் என்ன செய்திருப்பார்கள், அதே நிலை தானே நமது மீனவர்களுக்கும் என்பது ஏன் அவர்களுக்குப் புரியவில்லை.
எங்கே போனார்கள் பாஜக தலைவர்கள்
தமிழக நலன்களில் மத்திய அரசு அக்கறையோடு இருப்பதாக பாஜக மார் தட்டிக் கொள்கிறது. ஆனால் இந்திய கடற்படையின் தாக்குதல் குறித்து மத்திய அரசோ, தமிழக பாஜகவோ இதுவரை வாய் திறக்கவே இல்லை. தமிழக பாஜக தலைவர் தமிழிசை மட்டும் இந்த விவகாரத்தை மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளதாகக் கூறியுள்ளார்.
ஏன் வாய்திறக்கவில்லை?
இந்தியை நாட்டில் புகுத்தியதோடு நிறுத்திக்கொள்ளாமல், கடலுக்கு கொண்டு சென்றுவிட்டது பாஜக. எனினும் அப்பாவி மீனவர்கள் மீதா இந்த தேசப்பற்றை காண்பிக்க வேண்டும். தமிழக அரசியல் பிரச்னைகளில் முந்திக் கொண்டு கருத்து கூறும் தாமரைக்கட்சியினர் இந்த விவகாரத்தில் மட்டும் ஏன் மவுனிகளாக இருக்கின்றனர்.