சிலை கடத்தல் வழக்கு.. யாருமே வலியுறுத்தாமல், ஏன் சிபிஐ விசாரணை கேட்கிறது தமிழக அரசு?
Recommended Video
சென்னை: தாமாக முன்வந்து சிபிஐ வசம் ஒரு வழக்கை ஒப்படைப்பது என்பது தமிழக அரசு வரலாற்றில் மிகவும் அரிதான நிகழ்வு. அது இப்பொழுது சிலை கடத்தல் வழக்கில் நிகழ்ந்துள்ளது.
சிலை கடத்தல் பிரிவின் ஐஜி பொன் மாணிக்கவேல் மற்றும் தமிழக அரசின் நடுவே இணக்கமான சூழல் இல்லாத நிலையில் சிபிஐ வசம் வழக்கை ஒப்படைக்க தமிழக அரசு தானாக முன்வந்து உள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இதுகுறித்து வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் கூறுகையில், நன்றாக சென்று கொண்டு இருக்கும் ஒரு வழக்கை பாதியிலேயே நிறுத்திவிட்டு புதிதாக ஒரு விசாரணை அமைப்பிடம் அதை கொடுக்கும் போது விசாரணை தாமதமாகும். விசாரணை அமைப்புகளில் தங்களுக்கு வேண்டிய அதிகாரிகளை போட்டுக்கொண்டு வழக்கை இழுத்து மூடுவதற்கான முயற்சி நடைபெறுவதாக நான் சந்தேகிக்கிறேன்.
தற்போது தமிழக அரசு சார்பாக கொள்கை முடிவை மட்டும் தான் உள்ளது. அது தனது முடிவை வரும் 8ஆம் தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதாக கூறி உள்ளது. அப்படி முடிவை அறிவிக்கும் போது அது தொடர்பாக நான் முறையீடு செய்ய திட்டமிட்டுள்ளேன் என்று தெரிவித்தார்.
இதனிடையே பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா இன்று வெளியிட்டுள்ள ட்வீட்டில்,
சிலை கடத்தல் வழக்குகளை CBI வசம் ஒப்படைக்க கொள்கை முடிவு என்பது தற்போது கையில் உள்ள வழக்குகள் மட்டுமா அல்லது எதிர்காலத்தில் வரும் வழக்குகள் அனைத்துமா? மாநில அரசு தெளிவுபடுத்த வேண்டும்.
— H Raja (@HRajaBJP) August 1, 2018
சிலை கடத்தல் வழக்குகளை CBI வசம் ஒப்படைக்க கொள்கை முடிவு என்பது தற்போது கையில் உள்ள வழக்குகள் மட்டுமா அல்லது எதிர்காலத்தில் வரும் வழக்குகள் அனைத்துமா? மாநில அரசு தெளிவுபடுத்த வேண்டும். இவ்வாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
வழக்கு விசாரணையின் வரம்பு பற்றிய இப்படி ஒரு குழப்பமும் இந்த பிரச்சினையில் எழுந்துள்ளது.
எவ்வளவோ வழக்குகள் இன்னமும் நிலுவையில் உள்ளபோதும், அது குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தும் போதெல்லாம் அதை மறுத்து வரும் தமிழக அரசு, சிலை கடத்தல் வழக்கில் தாமாக முன்வந்து சிபிஐ விசாரணையை கோரியுள்ளது. இதற்கான அவசியம் என்ன என்பதை தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.