'எல்லாம் அவன் செயல்' பட பாணியில் கொல்லப்படுகின்றனரா தமிழக மாணவர்கள்?.... கிலி கிளப்பும் சந்தேகங்கள்!
உயர்கல்வி பயில வெளிமாநிலம் செல்லும் மருத்துவ மாணவர்கள் உயிரிழப்பு என்பது தொடர்கதையாகி வருகிறது. இதே போன்று அவர்களின் மரணத்திற்கு யார் காரணம் என்ற மர்மமும் நீடித்தபடியே தான் இருக்கிறது, இதற்கு முற்றுப்
சென்னை: உயர்கல்வி பயில வெளி மாநிலம் செல்லும் தமிழகத்தை சேர்ந்த மருத்துவ மாணவர்கள் உயிரிழப்பதும், தற்கொலைக்கு முயல்வதும் தொடர்கதையாகி வருகிறது. மெரிட்டில் இடம் கிடைத்து படிக்கச் செல்லும் மாணவர்களின் சந்தேக மரணங்கள் தீர்க்கப்படாமலே உள்ளன, இவற்றிற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுவது எப்போது?
கடந்த 2016ம் ஆண்டு ஜூலை மாதம் 10ம் தேதி, எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் மருத்துவ மேற்படிப்பு படித்து வந்த திருப்பூரைச் சேர்ந்த சரவணன் மர்மமான முறையில் உயிரிதுந்தார். சரவணன் முதுகலை முதலாமாண்டு படித்து வந்த நிலையில் திடீரென உயிரிழந்தது சந்தேகத்தை ஏற்படுத்த சரவணனின் தந்தை டெல்லி உயர்நீதிமன்றம் மூலம் சரவணனின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய உத்தரவு பெற்றார்.
இதன்படி நடந்த மறுபிரேத பரிசோதனையில் சவைணன் தற்கொலை செய்திருக்க வாய்ப்பில்லை என்றும் அவருககு மருத்துவத் தொழிலில் தேர்ச்சி பெற்ற யாராவது தான் விஷ ஊசியை செலுத்தி இருக்க வேண்டும் என்றும் மறுபிரேத பரிசோதனை அறிக்கை கூறியது. சரவணன் விவகாரத்திலேயே உண்மை குற்றவாளிகள் யாரும் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்படவில்லை.
சரத் பிரபு திடீர் மரணம்
இந்நிலையில் இன்று மீண்டும் திருப்பூரைச் சேர்ந்த சரத் பிரபு என்ற மருத்துவ மாணவர் யூசிஎம்எஸ் மருத்துவமனையில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். மருத்துவ உயர்கல்வி பயின்று வரும் சரத்பிரபு காலையில் குளிப்பதற்காக சென்றவர் அரை மணி நேரமாகியும் திரும்பி வரவில்லை, பின்னர் கதவை உடைத்து பார்த்த போது அவர் இறந்து கிடந்தது தெரிய வந்துள்ளது.
சரத்பிரபுவிற்கு அதிக இன்சுலின்
இதனையடுத்து சரத்பிரபு உடன் விடுதியில் தங்கியிருந்த மாணவர்கள் போலீசாருக்கும், கல்லூரி நிர்வாகத்திற்கும் தகவல் அளித்துள்ளனர். சரத்பிரபு உடலில் அளவுக்கு அதிகமான இன்சுலின் செலுத்தப்பட்டுள்ளதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நல்ல நிலையில் குளிக்கச் சென்றவர் திடீரென இன்சுலின் அதிக அளவு எடுத்துக் கொண்டு உயிரிழக்க காரணம் என்ன, இதுவும் திட்டமிட்ட கொலையா என்ற சந்தேகம் எழுகிறது.
ஆந்திராவில் நடந்த சம்பவம்
ஆந்திராவில் மருத்துவ மாணவி சிந்தாமணி என்பவர் மெரிட்டில் இடம் கிடைத்து மருத்துவம் பயில வர அவரை கல்லூரி நிர்வாகத்தினரே சீட்டுக்கு கிடைக்கும் பணத்திற்காக கொல்வது தமிழில் எல்லாம் அவன் செயல் என்ற திரைப்படமாக வெளி வந்திருந்தது. இந்த திரைப்படத்தில் ராகிங் காரணமாக மாணவி தற்கொலை என்று முதலில் தொடங்கி இறுதியில் மருத்துவ சீட்டிற்காக கொல்லப்பட்டார் மாணவி என்ற உண்மை வெளிவரும்.
எப்போது முற்றுப்புள்ளி?
அது போலத் தான் இடஒதுக்கீடு கிடைத்து வெளி மாநிலங்களில் மெரிட்டில் படிக்கச் செல்லும் மாணவர்கள் தொடர்ந்து விஷ மருந்து போட்டு உயிரிழக்கும் சம்பவங்கள் நினைவுபடுத்துகின்றன. வெளி மாநிலங்கள் சென்று பயிலும் சிறந்த மாணவர்களின் உயிர் அடுத்தடுத்து காவு வாங்கப்படுவதற்கு எப்போது தான் முற்றுப்புள்ளி வைக்கப்படப் போகிறது என்ற கேள்வியை எழுப்புகின்றன சரவணன், சரத்பிரபுவின் சந்தேக மரணங்கள்.