தமிழகத்தில் எதற்காக விஎச்பியின் ராமராஜ்ய ரத யாத்திரை தடுக்கப்படுகிறது?
விஎச்பியின் ராமாராஜ்ஜிய ரத யாத்திரையால் தென்மாவட்டங்களில் பதற்றமான சூழல் நிலவுகிறது.
Recommended Video
திருநெல்வேலி : விஷ்வ இந்து பரிஷத்தின் ராமராஜ்ஜிய ரத யாத்திரை தமிழகத்திற்குள் வந்துள்ள நிலையில் தென்மாவட்டங்களில் பதற்றமான சூழல் நிலவுகிறது. மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் இந்த ரதயாத்திரையை எதிர்த்து இஸ்லாமிய அமைப்புகள், விடுதலை சிறுத்தைகள் மற்றும் திராவிடர் அமைப்புகள் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
அயோத்தியில் ராமஜென்ம பூமியில் ராமர்கோயில் கட்டுவது, ராமராஜ்யத்தை மீண்டும் அமைத்தல், கல்வி பாடத்திட்டத்தில் ராமாயணம், உலக இந்து தினம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் ரதயாத்திரை நடைபெற்று வருகிறது.
மத்திய பிரதேசம், மஹாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா வழியாக வரும் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் ரத யாத்திரையை கேரளா வழியாக தமிழகத்திற்குள் வர திட்டமிடப்பட்டிருந்தது. திருநெல்வேலி மாவட்டம் வழியாக தமிழகத்திற்குள் நுழைந்து விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம், ஸ்ரீவில்லிப்புத்துார், கல்லுப்பட்டி, திருமங்கலம் வழியாக மதுரை சென்று அங்கு பொதுக்கூட்டத்திற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இறுதியாக, ராமேஸ்வரம் சென்று ரதயாத்திரை முடிவடைகிறது.
போராட்டக்களமாகியுள்ள நெல்லை
கர்நாடகா, கேரளாவில் எதிர்ப்புகள் எழாத நிலையில் தமிழகத்தில் ரதயாத்திரைக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. மதவாதத்தை தூண்டும் விதமாக நடத்தப்படும் ரதயாத்திரை தடுத்தநிறுத்தப்பட வேண்டும் என்று பலரும் சாலை மறியல், போராட்டங்களை நடத்தி வருகின்றனர். போராட்டங்களை முன்எடுக்கச் செல்லும் தலைவர்களும் தடுத்து நிறுத்தப்பட்டு முன்எச்சரிக்கையாக கைது செய்யப்படுகின்றனர்.
மதக்கலவரமில்லா மாநிலம்
தென்மாவட்டங்களில் இந்து மதத்தை திணிக்கும் விதமாக இந்த ரதயாத்திரை நடைபெறுவதாகவும், இதனால் மதக்கலவரம் ஏற்படும் என்று இஸ்லாமிய அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். தமிழகத்தில் இதுவரை எந்த மதக்கலவரமும் நிகழ்ந்ததில்லை. 1982ல் மண்டைக்காட்டில் கிறிஸ்தவர்கள், இந்துக்களுக்கு எதிராக நடந்த கலவரம் மட்டுமே மதக்கலவரத்திற்கு சான்றாக இருக்கிறது.
மதநல்லிணக்கம் சீர்குலையும்
இந்நிலையில் திட்டமிட்டு மதக்கலவரத்தை தூண்டும் விதமாக ரத யாத்திரை தமிழகத்திற்குள் வருவதாகவும் அரசியல் கட்சியினர் தெரிவிக்கின்றனர். மதநல்லிணக்கம் நிலவும் தமிழகத்தில் மதக்கலவரத்தை தூண்டும் இந்த ரதயாத்திரையை தடுத்து நிறுத்தாமல் அரசு ஏன் அனுமதி அளித்தது என்றும் கேள்வி எழுப்பப்படுகிறது.
பாஜகவின் தந்திரம்
தமிழகத்தில் இதுவரை விஎச்பி ரதயாத்திரை, ஆர்எஸ்எஸ் ஊர்வலம் என்ற பேச்சுகள் இருந்ததில்லை. ஆனால் ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு ஆட்சியை ஆட்டிப்படைக்கும் பாஜக தந்திரமாக மதவாதத்தை தமிழகத்திற்குள் புகுத்தி வருவதாகவே ராமராஜ்ய ரதயாத்திரை, ஆர்எஸ்எஸ் ஊர்வலம் உள்ளிட்டவை பார்க்கப்படுகின்றன.