மழை பெய்யுதுன்னு தெரிஞ்சும் மழை யாகம் நடத்திய அறிவாளி அமைச்சர்!
தருமபுரி மாவட்டத்தில உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் நடத்திய மழைக்கான யாகத்தில் எம்எல்ஏ-க்கள் கலந்து கொள்ளாததன் பின்னணி தற்போது தெரியவந்துள்ளது.
தருமபுரி: யாகம் நடத்துவதற்கு முன்பே தருமபுரி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மழை பெய்து கொண்டிருப்பதால் அமைச்சர் கே.பி.அன்பழகன் நடத்திய யாகத்தில் எம்எல்ஏ-க்கள் பங்கேற்கவில்லையாம்.
தமிழகத்தில் கடந்த வடக்கிழக்கு பருவமழை பொய்த்துவிட்டதால் மாநிலத்தில் கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே வெயில் வாட்டி வதைத்தது. இதனால் நீர் நிலைகள் வறண்டன. இதைத் தொடர்ந்து பெண்கள் ஆங்காங்கே காலிக்குடங்களுடன் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
தண்ணீர் பஞ்சத்தை போக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வில்லை எனக் கூறி ஆங்காங்கே அமைச்சர்கள், எம்எல்ஏ-க்களை பொதுமக்கள் முற்றுகையிடும் போராட்டமும் நடைபெற்று வருகிறது. அதற்கான தீர்வு காணாமல் அமைச்சர்கள் அந்தந்த மாவட்டங்களில் மழைக்காக யாகத்தை நடத்தி வருகின்றனர்.
தர்மபுரியில்
அந்த வகையில் நடத்தப்படும் யாகங்களில் பெரும்பாலும் அந்தந்த தொகுதி எம்எல்ஏ-க்கள் மூத்த நிர்வாகிகள் கலந்து கொண்டு வருகின்றனர். ஆனால் தருமபுரி மாவட்ட அதிமுக சார்பில தருமபுரி கோட்டை கோயில், தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோயில் மற்றும் அதியமான்கோட்டை காலபைரவர் கோயிலில் உயர்கல்வித்துறை அமைச்சர் யாகம் நடத்த ஏற்பாடு செய்து இருந்தார்.
அமைச்சர் அன்பழகன்
அதில் அமைச்சர் கே.பி.அன்பழகன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் டி.ஆர்.அன்பழகன், எஸ்.ஆர் வெற்றிவேல் மட்டுமே கலந்து கொண்டனர். ஆனால் முன்னாள் அமைச்சர் பழனியப்பன், அரூர் எம்எல்ஏ முருகன் மற்றும் ஒன்றிய செயலாளர்கள் என யாரும் கலந்து கொள்ளவில்லை.
காரணம் செம காமெடி
தற்போது அதிமுகவில் கோஷ்டி கலாசாரம் களைக்கட்டி வருவதால் என்ன என்று விசாரித்த போது அதிமுகவினர் சொல்லிய காரணம் திகைப்பில் ஆழ்த்தியது. அதாவது அன்பழகன் மழைக்காக யாகம் நடத்தவில்லையாம். கடந்த ஒரு வாரமாக தருமபுரியில் நல்ல மழை பெய்து வருகிறதாம்.
மழை பெய்யுதே பிறகெதற்கு யாகம்!
அமைச்சர் மழை வருவதற்கு முன்பு யாகம் நடத்திருந்தால் கலந்து கொண்டிருக்கலாம், ஆனால் மழை பெய்யத் தொடங்கிய பிறகு எதற்கு யாகம் நடத்த வேண்டும் என்று ஆப்சென்ட் நிர்வாகிகளின் ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.
செல்லூர் ராஜு சார்.. உங்களுக்கு போட்டி கடுமையாகிட்டே போகுது!