அப்துல் கலாம் சிலையில் பகவத் கீதை.... மத்திய அரசுக்கு இந்த சர்ச்சை தேவையா?
அப்துல் கலாம் சிலை அருகே பகவத் கீதையை வைத்து சர்ச்சைகளுக்கு மத்திய அரசு இடம் கொடுத்து விட்டதாக பொதுமக்கள்ள் கருதுகின்றனர்.
சென்னை: அப்துல் கலாம் சிலை அருகே பகவத் கீதையை வைத்து மத்திய அரசு சர்ச்சையை ஏற்படுத்திவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மக்களின் ஜனாதிபதியாக திகழ்ந்த அப்துல் கலாம், கனவு காணுங்கள் என்று மாணவர்களிடம் கூறினார். மேலும் இந்தியா வல்லரசாக மாணவர்களுக்கு உத்வேகத்தை அளித்து வந்தார்.
2015-ல் மறைந்த அப்துல்கலாம் உடல் சொந்த ஊரான பேக்கரும்பில் நல்லடக்கம் செய்யப்பட்டது. மேலும் அவருக்கு நினைவு மண்டபம் அமைப்பதாக மத்திய அரசு அறிவித்தது. அதன்படி ரூ.15 கோடி அவருக்கு மணி மண்டபம் கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கடந்த 27-ஆம் தேதி நடைபெற்றது.
சிலையால் சர்ச்சை
அந்த மணி மண்டபத்துக்குள் கலாம் சிலை காவி நிறத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. அத்துடன் சிலை அருகே பகவத் கீதை நூலும் வைக்கப்பட்டுள்ளது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
பைபிள், குரான்
இதைத் தொடர்ந்து கலாமின் அண்ணன் பேரன் சலீம் நேற்று புனித நூல்களான பைபிள், குரான் ஆகியவற்றை கொண்டு வந்து பகவத் கீதைக்கு பக்கத்தில் வைத்தார். மேலும் கலாம் அனைத்து மதத்தினருக்கும் பொதுவானவர் என்பதால் வைத்ததாகவும் கூறினார்.
இந்து மக்கள் கட்சி
பைபிளையும், திருக்குரானையும் வைத்ததற்கு இந்து மக்கள் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதைத் தொடர்ந்து தான் வைத்த புனித நூல்களை எடுத்த சலீம் அவற்றை அங்கிருந்த கண்ணாடி பேழைக்குள் வைத்துவிட்டார்.
சர்ச்சை ஏன்
அப்துல் கலாம் பகவத் கீதையை சிறந்த நூல் என்று கூறுவார். ஆனால் அதை காட்டிலும் மாணவர்களுக்கு திருக்குறளையே மேற்கோள் காட்டி உரையாடுவார். எனவே உலக பொதுமறை என போற்றப்படும் திருக்குறளையோ, மாணவர்களால் பெரிதும் ஈர்க்கப்பட்ட கலாம் எழுதிய அக்னி சிறகுகள் புத்தகத்தையோ, இல்லை அறிவியல் சார்ந்த புத்தகத்தையோ வைத்திருக்கலாம் என்பதே பொதுமக்கள் கருத்து.
மத்திய அரசின் சர்ச்சை
மாணவர்களுக்காக தனது வாழ்நாள் முழுவதும் உழைத்து வந்த மக்கள் ஜனாதிபதி அரசியலுக்கு அப்பாற்பட்டவர் என்பதை மத்திய அரசு உணராதது ஏன்? இதனால் மத ரீதியிலான பிரச்சினைகள் வரும் என்பது மத்திய அரசு தெரியாதா என்ன. இவ்வளவு ஏன், இதை கலாமின் உறவினர்கள் எப்படி ஏற்றுக் கொள்வார்கள் என்று கூடவா மத்திய அரசு அறியாது என கேள்வி கணைகளை பொதுமக்கள் தொடுக்கின்றனர்.