ஐபிஎல்லுக்கு சிறப்பு ரயில்களை இயக்க முடியும்போது நீட் தேர்வுக்கு இயக்க மனமில்லாதது ஏன்?
Recommended Video
சென்னை: ஐபிஎல் போட்டிகளை பார்வையிட புணே உள்ளிட்ட வடமாநில பகுதிகளுக்கு சிறப்பு ரயில்களை இயக்கிய ரயில்வே அமைச்சகம் நீட் தேர்வு எழுதும் தமிழக மாணவர்களுக்கு சிறப்பு ரயிலை இயக்க மனவராதது ஏன்?
மருத்துவ படிப்புக்கான சேர்க்கைக்கு நீட் தேர்வுகள் கட்டாயம் என்ற விவகாரம் கடந்த ஆண்டு முதல் தமிழகம் உள்ளிட்ட இன்னபிற மாநிலங்களில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கு கேரளம், புதுவை, கேரளம் உள்ளிட்ட மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன.
இதை கண்டித்து பல்வேறு போராட்டங்களும் நடத்தப்பட்டன. எனினும் தமிழக ஏழை மாணவர்களுக்கு மருத்துவம் படிப்பு எட்டாக்கனியாக வேண்டும் என்பதற்காகவே இந்த தேர்வு நடத்தப்படுகிறது என அரசியல்வாதிகள் குற்றம்சாட்டினர்.
தமிழகத்தில் மையம்
நீட் தேர்வே வேண்டாம் என்று போராட்டம் நடத்திய நிலையில் தமிழகத்தில் நீட் தேர்வு மையம் அமைக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் இந்த கோரிக்கையை நிறைவேற்றப்படவில்லை. தமிழக மாணவர்களுக்கு கேரளம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
சிறப்பு ரயில்கள் இல்லை
நீட் தேர்வு நாடு முழுவதும் நாளை நடத்தப்படவுள்ளது. இந்த தேர்வுக்காக சிறப்பு ரயில்களை இயக்குமாறு தமிழக அரசு இதுவரை எந்த கோரிக்கையும் வைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் சிறப்பு ரயில்கள் ஒதுக்க முடியாது என்றும், 5,500க்கும் மேற்பட்ட மாணவர்கள், அவர்களுடன் வரும் பெற்றோர்களுக்கு உடனடியாக சிறப்பு ரயிலை ஒதுக்க முடியாது என்று மத்திய ரயில்வே அமைச்சகம் கூறிவிட்டது.
புணே சென்ற ரயில்
புணேவில் நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளுக்கு மட்டும் சிறப்பு ரயில் இயக்கப்பட்டது. ஆனால் மருத்துவ கனவில் நீட் தேர்வு எழுத செல்லும் மாணவர்களுக்கு சிறப்பு ரயிலை இயக்காமல் இருப்பது வேதனை அளிக்கிறது. நீட் தேர்வு மையம்தான் தமிழகத்தில் அமைக்க முடியாது என்று கைவிரித்த மத்திய அரசு, சிறப்பு ரயிலையாவது இயக்கியிருக்கலாமே.
சிறப்பு ஏற்பாடுகள்
நீட் தேர்வு நடத்த தமிழகத்தில் மையம் தரக் கூடாது என்று சிபிஎஸ்இ முன்கூட்டியே திட்டமிட்டுதானே மாணவர்களை அலைக்கழிக்கிறது. அவ்வாறிருக்கையில் தமிழக அரசாவது சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் என்று மத்திய ரயில்வே அமைச்சகத்திடம் கோரிக்கை வைத்திருக்கலாமே. எது எப்படியோ மத்திய அரசுக்கு மாணவர்களின் நலனை காட்டிலும் சூதாட்டம் என்று அழைக்கப்படும் கிரிக்கெட் மட்டும்தான் முக்கியத்துவம் என்று கருதுகிறது போல.
எப்படி விண்ணப்பம்
படித்த பெற்றோர்கள் , வசதியுள்ள பெற்றோர்கள் இதுபோல் வெளிமாநிலங்களுக்கு தங்கள் வசதிகேற்ப செல்ல முடியும். படிக்காத ஏழை பெற்றோர்கள் இதுபோல் மாநிலம் விட்டு மாநிலத்துக்கு எப்படி அனுப்புவது என்ற அச்சத்தின்காரணமாக சிலரை தேர்வு எழுத அனுப்பவில்லை என்று கூறப்படுகிறது. தமிழகத்தில் இருந்து மருத்துவ மாணவரே உருவாகக் கூடாது என்பதில் மத்திய அரசு பெரும் அக்கறை காட்டி வருகிறது என்பதை தவிர வேறு என்ன சொல்வது.