குஜராத் எம்எல்ஏக்களுக்காக ரெய்டு நடத்தும் ஐடி, கூவத்தூர் ரிசார்ட் போகாதது ஏன்?
சென்னை: குஜராத் எம்.எல்.ஏக்களை தங்க வைத்து பராமரித்ததற்காக கர்நாடக மின்சாரத்துறை அமைச்சர் டி.கே.சிவகுமார் வீடு மற்றும் அவருக்கு வேண்டியவர் வீடுகளில் எல்லாம் ரெய்டு நடத்தியுள்ள வருமான வரித்துறையின் செயல்பாடு உள்நோக்கம் கொண்டது என அம்பலமாகியுள்ளது. கூவத்தூரில் அதிமுக எம்எல்ஏக்களை எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியை காப்பாற்ற சசிகலா தங்க வைத்திருந்தபோது ஏன் ஐடி ரெய்டு நடக்கவில்லை என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
குஜராத் ராஜ்யசபா தேர்தலில் காங்கிரஸ் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி கட்சியை உடைத்தது பாஜக. இதனால் சிலர் கட்சி தாவினர். அச்சமடைந்த காங்கிரஸ், அக்கட்சி ஆட்சி நடைபெறும் கர்நாடகாவுக்கு எம்எல்ஏக்களை கடத்தி கொண்டுவந்தது.
இங்கு பெங்களூர்-மைசூர் சாலையிலுள்ள ஈகிள்டன் ரெசார்ட்டில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
சோனியாவுக்கு நெருக்கம்
எம்எல்ஏக்கள் தங்கியிருக்கும் வரையிலாகும் செலவீனங்களை டி.கே.சிவகுமார் பார்த்துக்கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இவர் சோனியா காந்திக்கு நெருக்கமான கர்நாடக காங்கிரசின் மூத்த தலைவர்களில் ஒருவர். இதனால் சிவக்குமாருக்கு இந்த பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தொழிலதிபர்
டி.கே.சிவகுமார் அரசியல்வாதி மட்டுமில்லாது, ரியல் எஸ்டேட், கிரானைட் தொழிலதிபரும் ஆவார். எனவே பண வரத்து அதிகம். இதையெல்லாம் மோப்பம் பிடித்துதான் அவரை குறி வைத்து வருமான வரி துறை ரெய்டு நடத்தி வருகிறது.
ரெய்டுகள்
டி.கே.சிவகுமாரின் சகோதரர் சுரேஷ் அவரின் நண்பர் பாலாஜி, துவாரகநாத் ஆகியோர் வீடுகளும் ரெய்டுக்கு தப்பவில்லை. எம்எல்ஏக்கள் உள்ள ரிசார்ட்டிலும் ரெய்டுகள் நடந்து வருகின்றன. இதனால் காங்கிரஸ் வட்டாரத்தில் பதற்றம் நிலவி வருகிறது. முழுக்க முழுக்க காங்கிரஸ் எம்எல்ஏக்களை பாதுகாத்துவிட்டார்கள் என்ற கோபத்தில் பாஜக மேலிடம் ஏவி விட்டுதான் ஐடி இவ்வாறு ரெய்டு நடத்திவருவது கண்கூடாகி விட்டது.
கூவத்தூரில் இல்லை
அதேநேரம், கூவத்தூரில் அதிமுக எம்எல்ஏக்கள் ஒரு ரெசார்ட்டில் அடைத்து வைக்கப்பட்டபோது ஐடி துறை ஏன் ரெய்டு நடத்தவில்லை என்ற கேள்வியும் எழுந்துல்ளது. எடப்பாடி பழனி அரசை காப்பாற்ற அதிமுக எம்எல்ஏக்களை அங்கே அடைத்து வைத்திருந்தார் சசிகலா என்ற குற்றச்சாட்டு இருந்தது. ஆனால் அப்போது எந்த நடவடிக்கையையும் எடுக்காத ஐடி துறை குஜராத்தில் பாஜக பக்கம் வரவழைக்க காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு நெருக்கடி கொடுக்கிறது. இதன்மூலம், வருமான வரித்துறை என்பது தன்னாட்சி அமைப்பு இல்லை என்பதும், ஏவியதும் பாயும் ஒரு துறை என்பதும் உறுதியாகிவிட்டது.