ஜெ. முதல் தனபால் வரை.. அரசு மருத்துவமனையை அரசியல் தலைவர்கள் புறக்கணிப்பது ஏன்?
சென்னை: முதல்வர் உட்பட அரசு அதிகாரத்தில் உள்ள அனைவருமே அரசு மருத்துவமனையை புறக்கணித்துவிட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவது ஏன் என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் உள்ளது.
தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவி வகித்த காலத்தில் அவருக்கு நீர்ச்சத்து குறைபாடு என கூறி, சென்னை, கிரீம்வேஸ் சாலையிலுள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
ஆனால் சுமார் மூன்று மாதங்கள் சிகிச்சை பெற்ற ஜெயலலிதா மரணமடைந்தார். டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து டாக்டர்கள் அப்பல்லோவுக்கு அழைத்துவரப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டபோதிலும், அவர் சிகிச்சைக்கு சேர்ந்தது முதல், இறப்பது வரை அப்பல்லோ மருத்துவமனையில்தான் இருந்தார்.
அமைச்சர்
இதேபோல அமைச்சர் எம்.சி.சம்பத், உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஜனவரி மாதம் அப்பல்லோவில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டு, பிறகு நலம் பெற்றார். ஜெயலலிதா மறைந்த ஒரு மாதத்திலேயே சம்பத், அப்பல்லோவில் சிகிச்சைக்கு சேர்ந்து உடனடியாக உடல் நலம் தேறினார்.
முன்னாள் முதல்வர்
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், உடல் உபாதைகள் ஏற்பட்டால், கோவையிலுள்ள தனியார் மருத்துவமனையில் ஆயுர்வேத சிகிச்சை எடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்.
ரஜினிகாந்த்
சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் ரஜினிகாந்த், தமிழக அரசியலில் காலடி எடுத்து வைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் உண்டு. ஆனால் அவரும் சிகிச்சை பெற அமெரிக்கா பறக்கிறார். அதிகபட்ச சிகிச்சை தேவைப்படும்போது சிங்கப்பூர் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
தனபால்
இந்த நிலையில், சபாநாயகர் தனபால் ரத்த அழுத்த பிரச்சினை காரணமாக, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு பதில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன்தான் இன்று சட்டசபையை நடத்தினார்.
ஸ்டாலின், விஜயகாந்த்
ஆளும் கட்சியினர் மட்டுமல்ல, கண் உபாதையால் பாதிக்கப்பட்டுள்ள, எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினும், சென்னையிலுள்ள சங்கர் நேத்ராலயா மருத்துவமனையில்தான் சிகிச்சை பெற்றார். முன்னாள் எதிர்க்கட்சி தலைவரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த், சென்னையிலுள்ள மியாட் மருத்துவமனையில் சமீபத்தில் 10 நாட்கள் தங்கி சிகிச்சை பெற்றார்.
அரசு மருத்துவமனை என்னவாயிற்று?
இப்படி தனியார் மருத்துவமனையில் மட்டுமேதான் அரசியல்வாதிகள் சிகிச்சைக்கு சேர்க்கப்படுகிறார்கள். ஆனால் மறுபக்கம், அரசு மருத்துவமனைகளில் சிறப்பாக சிகிச்சையளிக்கப்படுவதாக அதே அரசு தெரிவிக்கிறது. திமுக காலத்தில் கட்டப்பட்ட சட்டசபை கட்டிடத்தை மல்டி ஸ்பெஷாலிட்டியாக மாற்றியது ஜெ. தலைமையிலான அதிமுக அரசு. ஆனால், அப்படி பிடிவாதமாக மாற்றப்பட்ட, உயர்தர மருத்துவமனை என அரசால் சர்டிபிகேட் கொடுக்கப்பட்ட மருத்துவமனையில் கூட யாரும் சேரவில்லை.
கக்கன் மாதிரி இல்லையே
கக்கன் போன்ற அரசியல்வாதிகள், மக்கள் பணம் வீணாககூடாது என்பதை வாழ்வின் கொள்கையாக வைத்திருந்தனர். ஆனால், இப்போதைய அரசியல்வாதிகள் தனியார் மருத்துவமனைகளில் பணத்தை வாரி இறைத்து வருகிறார்கள். மறுபக்கம் அரசு மருத்துவமனைகளின் தரத்தை உயர்த்துவது பற்றியும் நடவடிக்கை எடுக்கவில்லை.