திருமுருகன் காந்தி கைது ஏன்.. திமுக எம்எல்ஏ அன்பழகன் கேள்விக்கு முதல்வர் பதில்
மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி ஏன் கைது செய்யப்பட்டார் என திமுக எம்எல்ஏ அன்பழகன் சட்டசபையில் கேள்வி எழுப்பினார். இதற்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதில் அளித்துள்ளார்.
சென்னை; மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டதற்கு சட்டசபையில் முதல்வர் பழனிச்சாமி விளக்கம் அளித்துள்ளார்.
சட்டசபையில் இன்று காவல்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது, திமுக எம்எல்ஏ அன்பழகன் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி ஏன் கைது செய்யப்பட்டார் என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த முதல்வர் பழனிச்சாமி, தடை செய்யப்பட்ட பகுதியில் போராட்டம் நடத்தியதால் திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டார் என்று விளக்கம் அளித்துள்ளார்.
காவல்துறை மாநாடு
இதனைத் தொடர்ந்து, காவல்துறை மாநாட்டை ஏன் நடத்தவில்லை. நீங்கள் முதல்வராக இருக்கும் போதாவது காவல்துறை மாநாட்டை நடத்த வேண்டும் என்று அன்பழகன் கூறினார்.
இறுதி ஈழப்போர்
இலங்கையில் உள்நாட்டுப் போர் 2009ம் ஆண்டு இறுதி கட்டத்தை அடைந்தது. அப்போது முள்ளிவாய்க்காலில் லட்சக்கணக்கான ஈழத் தமிழர்கள் கொல்லப்பட்டனர்.
முள்ளிவாய்க்கால் தினம்
இவர்களுக்கு கடந்த மே 21ம் தேதி சென்னை மெரினாவில் அஞ்சலி செலுத்தப்படும் என மே 17 இயக்கம் சார்பில் திருமுருகன் காந்தி சென்றார். ஆனால், மெரினாவில் அஞ்சலி செலுத்தக் கூடாது என்று தமிழக அரசு தடை விதித்தது.
4 பேர் மீது குண்டாஸ்
அதனை மீறி அஞ்சலி செலுத்தச் சென்ற திருமுருகன் காந்தி உள்ளிட்டவர்கள் மெரினாவிற்கு சென்றனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். அத்தோடு மட்டுமல்லாமல் திருமுருகன் காந்தி உள்ளிட்ட 4 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.