பல்லாயிரம் மக்கள் திரண்டு வரும்போது மனு வாங்காமல் எங்கே ஓடினார்? மாவட்ட ஆட்சியரை சுற்றும் மர்மங்கள்
மக்களிடம் மனுவை வாங்காமல் போலீஸை ஏவிவிட்ட மாவட்ட ஆட்சியர் எங்கே என்பதுதான் கேள்வி.
Recommended Video
தூத்துக்குடி: தங்களது வாழ்வாதாரத்தை காப்பாற்றுங்கள் அய்யா என மாதங்கள் கணக்கில் போராடிய மக்களை ஏறெடுத்துப் பார்க்காமல் மனு கொடுக்க வந்த நாளில் மாவட்ட ஆட்சியர் எங்கே போனார்? போலீசாரின் படுகொலைக்கு உத்தரவிட்ட மாபாதர்கள் யார்? என்பது மர்மமாக உள்ளது.
3 மாதங்களுக்கு மேலாக நாசகார ஸ்டெர்லைட்டுக்கு எதிராக மக்கள் கிளர்ச்சிகள் நடைபெற்று வந்தன. இதன் 100-வது நாளில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு கொடுப்போம்.. அப்போது ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதாக அறிவிக்காவிட்டால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலேயே முற்றுகைப் போராட்டத்தை அமைதி வழியில் நடத்துவோம் இதுதான் அப்பாவி மக்கள் வெளியிட்ட "பயங்கரவாத பிரகடனம்'.
இதற்குத்தான் 10-க்கும் மேற்பட்டோரை காவு கொண்டு 100-க்கும் மேற்பட்டோரை துப்பாக்கித் தோட்டாக்கள் துளைத்துள்ளன. ஆனால் இந்த படுபாதக கொலையின் சூத்ரதாரி யார்? என்பதில் மாவட்ட ஆட்சியரையையும் முன்வைத்து ஏராளமான கேள்விகள் எழுப்பப்படுகின்றன.
பம்மியது ஏன்?
மக்கள் மனு வாங்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வருவது என்ன மாபெரும் தேசதுரோகமா? மக்கள் முடிவெடுத்து அறிவியுங்கள் என இத்தனை மாதமாக கூறிவரும்போது அவர்களுக்கு விளக்கம் தராமல் பம்மியது ஏனாம்?
யாரிடம் முறையிடுவதாம்?
மக்கள் முடிவெடுக்காவிட்டால் முற்றுகை என அறிவிக்கிறார்கள்.. அவர்களை சமாதானப்படுத்தாமல் 144 தடை உத்தரவை ஆட்சியர் வெங்கடேஷ் ஏன் பிறப்பித்தார்? மக்களுக்கும் அரசுக்குமான பிரச்சனையை மாவட்ட ஆட்சியரிடம் சொல்லாமல் எஸ்பியிடமா மக்கள் முறையிடுவார்கள்?
பேச்சுக்கு முனைப்பு காட்டவில்லையே?
மக்கள் மனு கொடுக்க புறப்படுகிறார்கள் எனில் மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று இந்த பேரணியே நடக்காத வகையில் பேச்சுவார்த்தை நடத்தாது ஏன்? 5 கிலோ மீட்டர் பேரணியாக அலை அலையாக தன்னெழுச்சியாக வருகின்ற போதே இடையிலேயே போய் கூட மாவட்ட ஆட்சியர் சமாதானப் பேச்சு நடத்தாதது ஏன்?
ஆட்சியரே ஓடி ஒளிவதா?
மடியிலே கனமில்லை எனில் மக்களை சந்திக்க அச்சப்பட வேண்டியது ஏன்? மக்கள் வருகிறார்கள் எனில் அலுவலகத்தை விட்டு ஆட்சியாளர் ஏன் ஓடி ஒளிந்தார்?
ஜல்லிக்கட்டு பாணி அடக்குமுறை
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குள் நுழைந்த உடனே போராட்டக்கார்கள் சூறையாடினார்கள்.. தீ வைத்தார்கள் என்பது நம்பத்தான் முடிகிறதா? ஜல்லிக்கட்டுப் புரட்சியை முடிவுக்குக் கொண்டு வர பின்பற்றப்பட்ட அப்பட்டமான யுக்தியையே பின்பற்றவில்லை என மாவட்ட ஆட்சியர் கூறத்தான் முடியுமா?
இலக்கு வைத்து கொல்லப்பட்டது எப்படி?
கொத்து கொத்தாக மக்களை கொன்று குவிக்க போலீசாருக்கு உத்தரவிட்ட அந்த அரசு அதிகாரி யார்? ஸ்னைப்பர்களை பயன்படுத்தி தேர்ந்தெடுத்தார் போல் குறிப்பிட்ட புரட்சிகர இயக்கத்தின் தலைவர்கள் மட்டும் படுகொலை செய்யப்பட்டது எப்படி? இவ்வளவு பெரிய படுகொலை நிகழ்ந்தும் மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ் மவுனியாக இருப்பது ஏன்? எப்போதுதான் தப்பி ஓடிய மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ் மவுனம் கலைவார்?