9000 பணிக்கு தமிழகத்தில் ஆளா இல்லை?... எதற்காக வெளிமாநிலத்தவரை அனுமதிக்கிறது டிஎன்பிஎஸ்சி?
தமிழக அரசுத்துறைகளில் காலியாக உள்ள 9 ஆயிரத்து 351பணிகளுக்கு வெளிமாநிலத்தவரும் விண்ணப்பிக்கலாம் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. அப்படியானால் 9 ஆயிரம் பணியிடங்களுக்கான ஆட்கள் தமிழகத்தில் இல்லையா என்ற
Recommended Video
சென்னை : அரசுத் துறைகளில் காலியாக உள்ள 9 ஆயிரம் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளுக்கு வெளிமாநிலத்தவர் விண்ணப்பிக்கலாம் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. வேலைவாய்ப்புக்காக தமிழக இளைஞர்களே காத்திருக்கும் நிலையில் டிஎன்பிஎஸ்சி ஏன் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழக அரசின் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் அனைத்தும் தமிழ்நாடு அரசுப் பணி தேர்வாணையம் மூலம் போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. ஆண்டுதோறும் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளை லட்சக்கணக்கான மக்கள் விண்ணப்பித்து எழுதி வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஆண்டு டிஎன்பிஎஸ்சி தேர்வாணைய விதியில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி வெளிமாநிலத்தவரும் இனி டிஎன்பிஎஸ்சி தேர்வுகளை எழுதலாம் என்றும் வெற்றி பெறும் வெளிமாநிலத்தவர் பணியில் சேர்ந்து 2 ஆண்டுக்குள் தமிழ் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த அறிவிப்பு மாநில இடஒதுக்கீட்டிற்கே கேடு விளைவிக்கும் நிலையை உருவாக்கியுள்ளது.
வேலைவாய்ப்பு பறிபோகும்
அரசின் இந்த அறிவிப்பின் மூலம் அரசு வேலைவாய்ப்புகளில் பின்பற்றப்படும் இடஒதுக்கீடு முறைக்கும் வேட்டு விழும் நிலை உருவாகியுள்ளது. தமிழகத்திலேயே ஏராளமான இளைஞர்கள் வேலையில்லாத் திண்டாட்டத்தில் இருக்கும் நிலையில் வெளிமாநிலத்தவர்க்கு போட்டித் தேர்வுகளில் அனுமதி அளித்தது ஏன்? அப்படியானால் கொஞ்சம் கொஞ்சமாக மாநில மக்களின் நலனை கருத்தில் கொள்ளாமல் வெளிமாநிலத்தவர்க்கே முன்னுரிமை அளிக்க அரசும் முனைப்பு காட்டுகிறதா?
தமிழகத்தில் ஆள் இல்லையா?
கர்நாடகா, குஜராத், மஹாராஷ்டிரா மாநிலங்கள் தங்கள் மாநில மக்களுக்கே போட்டித் தேர்வுகளில் முக்கியத்துவம் அளிக்கின்றன. ஆனால் தமிழகம் மட்டும் ஏன் இந்தப் பாதையில் இருந்த விட்டு விலகி தன் வீட்டு பிள்ளைகளான தமிழக இளைஞர்களை கருத்தில் கொள்ளாமல் மாற்றார் வீட்டு பிள்ளைகளான வெளிமாநிலத்தவரை தூக்கி வளர்க்க நினைக்கிறது.
அரசுப் பணியிலும் விட்டுக்கொடுக்க வேண்டுமா?
மக்களின் வரிப்பணத்தை சம்பளமாக வாங்கும் அரசுப் பணியாளர்களாக சொந்த நாட்டு மக்களுக்கே தகுதி இல்லையா. அப்படியில்லையென்றால் அரசுப் பணிகளுக்கு தமிழக மக்கள் லாயக்கியாக இல்லை என்பதை மறைமுகமாக டிஎன்பிஎஸ்சி திட்டம் சொல்ல நினைக்கிறதா? மொழி, பண்பாடு என அனைத்திலும் விட்டுக் கொடுத்தது போல இனி தமிழக அரசின் பணிகளிலும் மக்கள் விட்டுக் கொடுத்து தான் போக வேண்டுமா?
அரசு கவனிக்குமா?
வந்தாரை வாழ வைத்த தமிழ்நாடு என்பதெல்லாம் பழைய மொழி, இன்றைய காலகட்டத்தில் வாழ்வதற்கே வழியில்லாமல் வந்தவர்களை மட்டுமே வாழ வைத்து அழகு பார்க்கிறார்கள் மக்கள். இதற்கு மைல்கல் சேர்ப்பது தான் டிஎன்பிஎஸ்சியின் இந்த திருத்தமா? மக்கள் நலனுக்காக மட்டுமே செயல்பட்டு வருகிறது அதிமுக அரசு என்று பெருமை பேசும் முதல்வரும், அமைச்சர்களும் இந்த விவகாரத்தை கவனித்து நடவடிக்கை எடுப்பார்களா? அல்லது வழக்கம் போல இதற்காக இளைஞர்கள் போராட்ட களத்தில் குதிக்கத் தான் நேரிடுமா?