நக்கீரன் கோபால் கைதில் ஆளுநருக்கு ஆதரவாக பேசிய டிடிவி தினகரன்.. என்ன காரணம்?
நக்கீரன் கோபால் கைதுக்கு ஆதரவாக டிடிவி தினகரன் பேசியது ஏன் என்று அரசியல் உலகில் விவாதம் எழுந்துள்ளது.
Recommended Video
சென்னை: நக்கீரன் கோபால் கைதுக்கு ஆதரவாக டிடிவி தினகரன் பேசியது ஏன் என்று அரசியல் உலகில் விவாதம் எழுந்துள்ளது.
நேற்று நக்கீரன் இதழின் ஆசிரியர் ஆர். கோபால் போலீசால் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் அவரை சிறையில் எடுக்க கூடாது என்று நேற்று எழும்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்து அவரை விடுதலை செய்தது.
அவருக்கு எதிராக ஆளுநர் மாளிகை புகார் அளித்து இருந்தது. அவர் சட்ட பிரிவு 124ன் கீழ் கைது செய்யப்பட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆதரவாக பேசினார்
நேற்று அரசியல் தலைவர்கள் எல்லோரும், ஆளுநர் மாளிகையின் புகாருக்கு எதிராகவே பேசினார்கள். ஆனால் டிடிவி தினகரன் மட்டும் ஆளுநருக்கு ஆதரவாக பேசினார். ஆளுநருக்கு எதிராக பொய்யான ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளை வைத்தது தவறு, இதனால் நக்கீரன் கோபால் கைது சரியானதே என்று தினகரன் கூறினார்.
ஏன் இப்படி
தினகரனின் இந்த நிலைப்பாடு பலருக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகிறது. தமிழக அரசியலில் அடுத்தடுத்து நடக்க போகும் சில மாற்றங்களையும், சில பழைய விஷயங்களையும் மனதில் வைத்து தினகரன் இப்படி பேசி இருக்கிறார் என்கிறார்கள்.
ஜெ சொத்துகுவிப்பு
மறைந்த முதல்வர் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு நடந்த போது அது குறித்து எழுதியவர் நக்கீரன் கோபால், நக்கீரன் இதழில், இந்த வழக்கு குறித்து நிறைய தகவல்கள், கட்டுரைகள் வந்தது. அதேபோல் சொத்துக்குவிப்பில் சசிகலாவின் பங்கு என்ன என்பது குறித்தும் நிறைய தகவல்கள் வந்தது.
சசிகலா சிறை
மேலும் தற்போது பெங்களூர் சிறையில் இருக்கும் சசிகலா ஷாப்பிங் செய்து வரும் வீடியோவையும் நக்கீரன் வெளியிட்டது. இது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த இரண்டு சம்பவமும் டிடிவி தினகரன் தரப்பை கோவத்திற்கு உள்ளாக்கி உள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே தினகரன் இப்போதே கோபாலுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து இருக்கிறார் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கிறார்கள்.
ஆதரவான போக்கா
அதேபோல், மத்திய அரசுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்கவும் தினகரன் முடிவெடுத்து இருக்கிறார் என்று மன்னார்குடி வட்டாரங்கள் தெரிவிக்கிறது. ஆளுனருடன் ஆதரவு போக்கை உருவாக்க தினகரன் முயன்று வருகிறார் என்று கூறுகிறார்கள். தமிழகத்தில் அடுத்த நடக்க போகும் சில அரசியல் மாற்றங்களை கருத்தில் கொண்டு இந்த முடிவில் இருப்பதாக கூறுகிறார்கள்.
எதனால்
தினகரன் ஆதரவு 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் இன்னும் சில நாட்களில் தீர்ப்பு வர உள்ளது. இந்த மாத இறுதியில் இந்த வழக்கில் தீர்ப்பு வர இருக்கிறது. இதன் காரணமாகவே இப்படி ஒரு நிலைப்பாட்டில் டிடிவி தினகரன் இருக்கிறார் என்றும் கூறுகிறார்கள்.