ஆளுநரைத் தேடிப் போய் திட்டு வாங்கனுமா.. விஷால் ஜகா வாங்க இதுதான் காரணமா!
ஆளுநரை சந்திக்காமல் விஷால் ஜகா வாங்கியதற்கான காரணம் தற்போது தெரியவந்துள்ளது.
Recommended Video
சென்னை: ஆர்.கே.நகரில் தனது பெயரில் முன்மொழிந்த இருவர் பல்டி அடித்து, அதை மறுத்துள்ள பின்னணியில், தேவையில்லாமல் ஆளுநரைப் போய்ப் பார்த்து அவரது விமர்சனத்தைப் பெறாமல் தவிர்க்கும் முகமாகவே அவருடனான சந்திப்பை விஷால் ரத்து செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் விஷால் வேட்புமனு தாக்கல் செய்தார். அதன் மீதான பரிசீலனை கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அப்போது அவரை முன்மொழிந்தவர்கள் என்று கூறப்படும் சுமதி, தீபன் ஆகியோர் தாங்கள் முன்மொழியவில்லை என்றும் வேட்புமனுவில் உள்ளது தங்களின் கையெழுத்து இல்லை என்றும் புகார் அளித்தனர்.
இதையடுத்து தேர்தல் அதிகாரி வேலுச்சாமி, விஷாலின் வேட்புமனுவை நிராகரித்தார். பின்னர் இதுதொடர்பான வீடியோவும் வெளியானது.
தேர்தல் ஆணையமும் கைவிரித்தது
ஆனால், முன்மொழிந்தவர்கள் மிரட்டப்பட்டதால் அத்தகைய நிலைப்பாட்டை அவர்கள் எடுத்ததாக விஷால் புகார் கூறியிருந்தார். இந்த புகாரை வைத்து தேர்தல் ஆணையத்தில் முறையிட்டார். ஆனால் அங்கும் அவரது பேச்சு எடுபடவில்லை. மாறாக ஆர்.கே.நகர் தேர்தல் அதிகாரியிடமே முறையிடுமாறு தேர்தல் ஆணையம் தெரிவித்துவிட்டது.
ஆளுநரிடம் நேரம் கேட்ட விஷால்
ஜனநாயக நாட்டில் தேர்தலில் போட்டியிட கூட உரிமையில்லையா? என்றும் தான் தேர்தலில் போட்டியிடுவதை தடுக்கவே இதுபோன்ற சதி நடைபெறுவதாகவும் ஆளுநரிடம் முறையிட விஷால் முடிவு செய்திருந்தார். அதற்காக நேரமும் அவர் கேட்டிருந்தார்.
முன்மொழிந்தவர்கள் வீடியோ
இதனிடையே விஷால் குறிப்பிட்ட சுமதி, தீபன் ஆகிய இருவரும் நேற்று ஆர்.கே. நகர் தேர்தல் அதிகாரி வேலுச்சாமியை சந்தித்து, விஷாலின் வேட்பு மனுவைத் தாங்கள் முன்மொழிந்து கையொப்பமிடவில்லை என்று தெரிவித்தனர். இவர்கள் கூறியதை வாக்குமூலமாக தேர்தல் பார்வையாளர்களும் பதிவு செய்து அந்த வீடியோவை வெளியிட்டனர்.
திடீர் உடல்நலம் பாதிப்பு
இந்நிலையில் இன்று ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்திக்க விஷாலுக்கு நேரம் ஒதுக்கப்பட்டது. ஆனால் உடல்நலக்குறைவு என்று கூறி விஷால் தனது திட்டத்தை ரத்து செய்து விட்டார். ஏன் இந்த திடீர் முடிவு என்பது குறித்து வேறு சில தகவல்களும் உலா வருகின்றன.
நீர்த்து போகும் காரணம்?
முன்மொழிந்த தீபனையும், சுமதியையும் யாரோ மிரட்டியதாக விஷால் இத்தனை நாட்கள் கூறி வந்தார். இது அவருக்கு பலமான பாயிண்டாக இருந்தது. ஆனால் தற்போது தீபனும், சுமதியும் தாங்கள் மிரட்டப்படவில்லை என்றும் விஷாலை முன்மொழியவில்லை என்றும் கூறியதால் விஷாலின் பாயிண்ட் நீர்த்து போயுள்ளது.
ஜகா வாங்கினார் விஷால்
இப்படிப்பட்ட நிலையில் ஆளுநரிடம் போய், எனக்கு அநீதி நடந்து விட்டது என்று முறையிட்டால், ஆளுநர் இந்த வீடியோவை சுட்டிக் காட்டி கேள்வி கேட்டால் எப்படிப் பதில் சொல்வது என்பதால்தான் தனது சந்திப்பையே விஷால் கைவிட்டு விட்டதாக சொல்கிறார்கள்.