தமிழகத்தில் ஆழம் பார்க்கும் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம்? விஷால் போட்டியின் பரபர பின்னணி
தமிழக அரசியலில் விஷாலை களமிறக்கி தெலுங்குதேசம் கட்சியை காலூன்ற வைக்க சந்திரபாபு முயற்சிப்பதாகவும் ஒரு சர்ச்சை கிளம்பியுள்ளது.
Recommended Video
சென்னை: தமிழக அரசியலில் விஷாலை களமிறக்கி தெலுங்குதேசம் கட்சியை காலூன்ற வைக்க சந்திரபாபு முயற்சிப்பதாகவும் ஒரு சர்ச்சை கிளம்பியுள்ளது.
கருணாநிதி, ஜெயலலிதா எனும் இரு ஆளுமைகள் கோலோச்சிய வரையில் தமிழக அரசியல் ஏதோ ஒரு வகையில் குறைந்தபட்ச கவுரத்துக்குரியதாக இருந்தது. ஜெயலலிதா மறைந்தார்.. கருணாநிதி தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெற்றார்.
இப்போது திணவெடுத்ததெல்லாம் தலைவர் வேஷம் போடுகிறது... நண்டு சிண்டெல்லாம் அரசியலில் நாட்டமையாகப் பார்க்கிறது.. இதற்கு நல்ல உதாரணம் விஷால்தான்.
தேர்தல் பேராசை
நடிகர் சங்கப் பொறுப்புக்கு வந்தாராம்.. தயாரிப்பாளர் சங்கத் தலைவரானாராம்... அடுத்தது ஸ்ட்ரெயிட்டா கோட்டைக்குப் போய் சி.எம். நாற்காலியில்தான் உட்காருவேன் என அடம்பிடித்துக் கொண்டு ஆர்.கே.நகரில் அலப்பறையை கூட்டி வருகிறார் விஷால். எங்கு தேர்தல் நடந்தாலும் உடனே ஓடிப் போய் போட்டியில் குதித்து விடுகிறார் விஷால்.
கருணாஸ் வகையறா
மாமேதைகளால் செதுக்கப்பட்ட தமிழக அரசியல் களத்தில் விஷால் போன்றவர்கள் கதகளி ஆட முயற்சிப்பது அரசியலுக்கு ஏற்பட்ட சாபமா அல்லது தமிழகத்தை ஆட்டிப்படைக்கும் சாபக்கேடா என்று தெரியவில்லை. ஆனால் கருணாஸ் போன்றவர்களைத் தேர்வு செய்த தமிழகத்தில் விஷால் போன்றவர்களும் வரத்தானே செய்வார்கள்.
நீண்டகால சதி
இந்த நிலையில் உண்மையில் விஷாலை இயக்குவதே தெலுங்குதேசம் தலைவரும் ஆந்திரா முதல்வருமான சந்திரபாபு நாயுடுதான் என்று ஒரு பேச்சு அடிபடுகிறது. இது நீண்ட காலமாகவே அடிபடுகிறது சர்ச்சைதான். சந்திரபாபு நாயுடுவைப் பொறுத்தவரை தெலுங்குதேசம் கட்சியை தேசியக் கட்சியாக்க வேண்டும் என்பது நீண்டகால திட்டம்.
தலையெடுக்கவே முடியாது
தமிழகத்தின் திமுக, அதிமுக கட்சிகள் ஆந்திரா, கர்நாடகா, கேரளாவில் கிளைகளைக் கொண்டிருக்கின்றன. ஆனால் தமிழகத்தில் அந்த மாநில கட்சிகள் இங்கே தலையெடுக்கவே முடியாது.
விஷால் களமிறங்கியது இதனால்
ஆகையால் எவர் வந்தாலும் வாழவைத்துவிட்டு தற்கொலை செய்து கொள்ளும் மானமற்ற தமிழர்களின் மழுங்கிப் போன உணர்வை பயன்படுத்தி இங்கேயும் வாலாட்டிப் பார்ப்போம் என்பது சந்திரபாபு வகையறாக்களின் நீண்டகால திட்டம். இதன் முதல் கட்டம்தான் வடசென்னையின் ஆர்.கே.நகர் தொகுதியில் விஷால் களமிறக்கப்பட்டிருப்பது.
நுழைவுச் சீட்டு
ஆர்.கே.நகர் தொகுதியில் கணிசமாக இருக்கும் தெலுங்கு பேசும் மக்களை குறிவைத்துதான் விஷால் களமே இறங்குகிறார். அத்துடன் எனக்கும் தமிழர்கள் ஓட்டுப் போட்டிருக்கிறார்கள். நானும் இந்த மண்ணில் எந்த பெயரிலும் அரசியல் செய்வேன் என சண்டியர்த்தனம் செய்வதற்கான நுழைவுச் சீட்டாகத்தான் விஷால் இங்கே நுழைந்திருப்பதாக தெரிகிறது.
சந்திரபாபு நாயுடு கோணம் உண்மைதானா அப்படி இருந்தால் விஷால் மூலம் தமிழகத்தை வளைக்கும் திட்டம், கனவு நிறைவேறுமா.. தமிழர்களே தமிழர்களே நீங்கதான் சொல்லோனும்!.