தயாரிப்பாளர் சங்கமும் போண்டா- பஜ்ஜி, பஞ்சாயத்தும்... விஷாலுக்கு வேட்டு வைத்த சர்ச்சை பேட்டியும்!
தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து நடிகர் விஷால் சர்ச்சைக்குரிய பேட்டியால் சஸ்பென்ட் செய்யப்பட்டார்.
சென்னை: தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் சுயநலமாக இருக்கிறார்கள் என காட்டமாக பேட்டி கொடுத்ததுதான் அந்த சங்கத்தில் இருந்து நடிகர் விஷால் சஸ்பெண்ட் செய்யப்பட காரணமாகிவிட்டது.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் செயற்குழுக் கூட்டம் சென்னையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. அதில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் இன்று முதல் தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து நடிகர் விஷால் தற்காலிகமாக நீக்கப்பட்டிருக்கிறார்.
இது தொடர்பாக தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்ட அறிக்கையில், கடந்த ஆகஸ்ட் 17-ந் தேதி வெளியான ஆனந்த விகடனில் வெளியான பேட்டி குறித்து விளக்கம் கேட்கப்பட்டது. அந்த விளக்கம் திருப்தி தராததால் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் 17-ந் தேதியன்று ஆனந்த விகடனில் வெளியான விஷாலின் சர்ச்சைக்குரிய பேட்டி இதுதான்:
கேள்வி: நிறைய சினிமாக்கள்... அதில் பலரும் லாபம் அடைஞ்சாலும் தயாரிப்பாளர் மட்டும் நஷ்டம் அடைகிறார். அதுக்கு என்ன காரணம்?''
விஷால்: அதுக்கு தயாரிப்பாளர்களும் தயாரிப்பாளர் சங்கமும்தான் காரணம். ஓர் இழப்பு எப்படி வருது, அதைத் தவிர்க்க என்ன செய்யலாம், அவசியம் இல்லாத செலவுகளை எப்படித் தவிர்க்கலாம், திருட்டு விசிடி-யினால் எவ்வளவு இழப்பு, திருட்டு விசிடி விக்கிறவங்களை என்ன பண்ணலாம், வருமானம் வரக்கூடிய இடங்கள் எவை, மும்பையில் ரிலீஸான 15-வது நாளே ஒரு படத்தின் டிவிடி-யை அதிகாரபூர்வமா ரிலீஸ் பண்ணுவதுபோல நாம பண்ணலாமா, ரிலீஸ் ஆன ஒரே மாசத்துல சிங்கிள் சாட்டிலைட் டெலிகாஸ்ட் ரைட்ஸ் கொடுப்பதுபோல நாம பண்ணலாமா, கமல் சார் சொன்ன மாதிரி முதல் நாளோ, 10-வது நாளோ, படத்தை டி.டி.ஹெச்-க்குக் கொடுத்து வருமானம் பண்ணலாமா, நெட் ஃபிளிக்ஸ், ஹீரோ டாக்கீஸ் போன்ற ஆன்லைன்கள்ல நீங்களே படத்தை ரிலீஸ் பண்ணலாமா...
இப்படி எந்த நல்ல விஷயம் பேசி முடிவுபண்ணலாம்னு கூப்பிட்டாலும் சங்கத்துல யாரும் வர மாட்டேங்கிறாங்க. ஆனா, 'சார், எனக்கு ஒரு பஞ்சாயத்து. அந்த ஹீரோ 50 லட்சம் பாக்கி வெச்சிருக்கார்'னு சொன்னா போதும். 'வாங்க வாங்க எல்லாரும் கூடலாம். போண்டா பஜ்ஜி சாப்பிட்டுக்கிட்டே பஞ்சாயத்துப் பண்ணலாம்'னு உட்கார்ந்துடுறாங்க. இதுதான் பிரச்னைகளுக்கு ஆரம்பப்புள்ளி.
தயாரிப்பாளர் சங்க நிர்வாகத்துக்கு சுயநலம் இல்லாத ஆட்கள் வரணும். ஆக்கபூர்வமான விஷயங்களைத் திறந்த மனதுடன் செய்தாலே, தமிழ் சினிமா செழிப்பா இருக்கும்.''
கேள்வி: அப்ப நடிகர் சங்கம் மாதிரி வரும் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலிலும் இளம் தயாரிப்பாளர்கள் போட்டியிடுவீங்களா?''
விஷால்: தற்போதைய நிர்வாகத்தை நாங்க 100 சதவிகிதம் மதிக்கிறோம். ஆனா, நாங்க எதிர்பார்த்த ஆக்கபூர்வமான வேலைகள் எதுவுமே நடக்கலை.
எப்படி நடிகர் சங்கத்தைக் கையில எடுத்துக்கவேண்டிய ஒரு சூழல் வந்துச்சோ, அந்த மாதிரி ஜனவரியில் நடக்க இருக்கும் தயாரிப்பாளர் சங்கத் தேர்தல்லயும் போட்டியிடுற சூழல் இப்ப வந்திருக்கு. இது பதவிக்காக அல்ல. மறுபடியும் இளைஞர்கள் திரளணும்கிற அவசியமும் இல்லை.
ஒவ்வொரு தயாரிப்பாளர்கள் மனசுக்குள்ளயும் இந்த எதிர்ப்பு உணர்வு இருக்கு. அது ஜனவரி மாசம் நிச்சயமா வெடிக்கும். அது 100 சதவிகிதம் உறுதி. ஏன்னா, தமிழ் சினிமா எங்க தாய்; சோறு போடுற தெய்வம். அதைக் காப்பாத்தணும்னா, எங்களுக்கு வேறு வழி இல்லை.
இவ்வாறு விஷால் கூறியிருந்தார்.