சர்க்கரை நோயாளியான ஜெயலலிதாவுக்கு அதிக அளவில் இனிப்புகள் கொடுத்தது யார், ஏன்?
சென்னை: ஏற்கனவே சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவுக்கு அப்பல்லோ மருத்துவமனையில் அதிக அளவில் இனிப்பு வகைகள் அளிக்கப்பட்டது குறித்து விசாரணை நடத்த ஆறுமுகசாமி ஆணையம் தீர்மானித்துள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் விசாரித்து வருகிறுது. பல ஆண்டுகளாக சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவுக்கு அப்பல்லோ மருத்துவமனையில் அதிக அளவில் இனிப்பு வகைகள் சாப்பிட கொடுக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதா அதிக அளவில் இனிப்பு சாப்பிட்டது அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் விசாரணை ஆணையத்திடம் அளித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2016ம் ஆண்டு நவம்பர் மாதம் 22ம் தேதி குலோப்ஜாமூன், ரசகுல்லா, லட்டு உள்ளிட்ட இனிப்புகளையும், டிசம்பர் 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் மில்க் ஷேக், ஸ்ட்ராபெர்ரி, ஆப்பிள், வாழைப்பழம் சாப்பிட்டார் ஜெயலலிதா என்றும் மருத்துவமனை நிர்வாகம் அளித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்க்கரை நோயால் அவதிப்பட்ட ஜெயலலிதாவுக்கு இப்படி அதிக அளவில் இனிப்பு கொடுக்கப்பட்டது ஏன்? வேண்டுமென்றே அவருக்கு இனிப்புகள் அளிக்கப்பட்டதா? மருத்துவர்களுக்கு தெரிந்து கொடுக்கப்பட்டதா இல்லை அவர்களின் பேச்சை மீறி இனிப்புகள் வழங்கப்பட்டதா என்று விசாரணை நடத்த ஆறுமுகசாமி ஆணையம் தீர்மானித்துள்ளது.