பீப் பாடலுக்காக போராடியவர்கள் 3 மாணவிகள் மரணத்திற்கு போராடலையே? கேட்கிறார் டி.ஆர்
சென்னை: சிம்புவிற்கு எதிராக கொதித்து எழுந்த மாதர் சங்கத்தினர், மூன்று மாணவிகளின் மரணத்திற்கு போராடாமல் எங்கே போனார்கள் என்று நடிகரும் இயக்குனருமான டி.ராஜேந்தர் கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அனிருத் இசையில் சிம்பு பாடியதாக வெளியான ‘பீப்' பாடல் விவகாரம் தமிழகம் முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மாதர் சங்கத்தினர் போராடியதை த்தில் இருவர் மீதும் சென்னை, கோவை காவல் நிலையங்களில் புகார் செய்யப்பட்டது. இது தொடர்பாக இரண்டு பேருக்கும் காவல்துறை சம்மன் அனுப்பியது. அனிருத் கோவை காவல் நிலையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
இதனிடையே, சிம்பு, நயன்தாரா ஜோடியாக நடித்துள்ள ‘இது நம்ம ஆளு' படத்துக்கு இசையமைத்துள்ள குறளரசனை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. இதில் கலந்துகொண்ட டி.ராஜேந்தரிடம், காவல்துறையில் சிம்பு ஆஜராகாமல் இருப்பது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதில் அளித்த டி.ராஜேந்தர், "பீப் பாடல் விவகாரத்தில் சென்னை மற்றும் கோவை காவல்துறையினர் சம்மன் அனுப்பினர். ஒரு குற்ற வழக்குக்கு இரண்டு இடத்தில் இருந்து சம்மன்கள் வந்தன. இரண்டு இடத்திலும் எப்படி ஆஜராக முடியும்?. இந்த விவகாரத்தில் சட்ட ரீதியாக நியாயம் கிடைக்க போராடுகிறோம். கடவுள் அருளால் வழக்கில் வெற்றி பெறுவோம். காவல்துறையில் ஆஜராகவேண்டும் என்று சிம்பு முடிவு எடுத்தால் முக்காடு போட்டுக்கொண்டு போக மாட்டார். லட்சக்கணக்கான ரசிகர்களுடன் ஆஜராகும் தெம்பு இருக்கிறது.
எதிலுமே ஒரு நோக்கம் வேண்டும். அந்த வழக்கைப் பற்றி பலரும் பலவிதமாக பேசிக் கொண்டிருந்தார்கள். இன்றைக்கு ஏன் அந்த வழக்கு அடங்கிப் போய்விட்டது. மன்னிப்பு கேட்க வேண்டும் என்று போராடியவர்கள் எல்லாம் இன்று எங்கே போனார்கள்?
3 மாணவிகள் இறந்து போனார்களே, அதற்கு அந்த மாதர் சங்கங்கள் எல்லாம் எங்கே போனார்கள்? அதை எல்லாம் ஏன் யாருமே கேட்க மாட்டேன் என்கிறார்கள். நான் எதிலுமே ஒரு அறிவுபூர்வமாக சிந்திப்பேன்" என்றும் டி.ராஜேந்தர் கூறியுள்ளார்.