சிவகங்கை அருகே பரவும் விஷ காய்ச்சல்.. பீதியின் பிடியில் மக்கள்.. வீட்டை விட்டு வெளியேறும் அவலம்
விஷக்காய்ச்சலுக்கு வீட்டை விட்டு மக்கள் வெளியேறி வருகிறார்கள்.
Recommended Video
சிவகங்கை: சிவகங்கை அருகே பரவிவரும் விஷக்காய்ச்சலால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அவர்கள் சொந்த வீட்டை விட்டு வெளியேறி வருகின்றனர்.
சிவகங்கை நகரில் 27 வார்டுகள் உள்ளது. இதில் ஒன்றாவது வார்டு முத்துசாமி நகரில் மட்டும் 300க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. முத்துச்சாமி நகர் முதல் தெருவில் சாக்கடைகள் சுத்தம் செய்யப்படாததால் கழிவு நீர் மாதக்கணக்கில் தேங்கி கிடக்கிறது. அவற்றில் இருந்து துர்நாற்றம் வீசுவதுடன் புழுக்கள் வெறியேறி வருகின்றன.
கொசுக்கள் அதிகமாக உற்பத்தியாகி மக்களை இரவில் உறங்கவிடுவதில்லை, கொசுக்கடிக்கு ஆளான குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் விஷக்காய்ச்சலால் பாதிக்கபட்டுள்ளனர். கொசுக்கள் கடித்து குழந்தைகளுக்கு உடல் முழுவதும் வீக்கங்கள் ஏற்பட்டுள்ளன. காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு வலிப்பு ஏற்பட்டு அவதிப்படுகின்றன. முதியவர்கள், பெண்கள் கை, கால்கள் வீங்கி நடமாட முடியாமல் கடந்த 20 நாட்களாக வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர்.
இது குறித்து அப்பகுதி மக்களில் ஒருவரான சரண்யா கூறுகையில், கொசுக்கடியால் குழந்தைகள் உடலில் முழுவதும் சிறு சிறு கொப்பளங்கள் ஏற்பட்டுள்ளது. முதலில் லேசான காய்ச்சல் நினைத்து அம்மை நோய் என நினைத்தேன். குழந்தை சாப்பிடாமல் அழுது கொண்டே இருந்தது. பின்னர் திடீரென்று வலிப்பு ஏற்பட்டதால் தனியார் மருத்துவமனையில் ரத்த பரிசோதனையில் இது ஒரு வித விஷக் காய்ச்சல் என தெரியவந்தது' என்றார்.
மேலும் ஜவஹர் என்பவர் கூறுகையில், இந்த தெருவில்தான் முன்னாள் அமைச்சர் செ. மாதவன், முன்னாள் எம்எல்ஏ தென்னரசு, மாவட்ட ஆட்சியர் தங்கவேல் இருந்தனர். விஐபி-க்களின் வார்டாக இது இருந்தது. தற்போது முள் காடாகவும், மாத கணக்கில் தெருவிளக்கு எரியவில்லை, மின்கம்பம் வீட்டின் மேல் சாய்ந்து உயிர்க்கு ஆபத்தான நிலையில் உள்ளோம். பெயரளவிற்கு மட்டுமே மருத்துவ முகாம் நடத்தினார்கள். இதுவரை 100க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சொந்த வீட்டை விற்று விட்டு, வாடகை வீட்டுக்கு சென்று விட்டனர். இதனால் முத்துசாமி நகர் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி உள்ளதாக கூறினார்.