கடன் தொல்லை: டெஸ்ட் ட்யூப் பேபியை அனாதையாக்கிவிட்டு தற்கொலை செய்த விதவை
சென்னை: ரூ.20 லட்சம் கடன் வாங்கி சோதனைக் குழாய் மூலம் குழந்தையை பெற்ற தம்பதி இறந்ததாதல் அந்த குழந்தை ஆதரவற்று நிற்கிறது.
சென்னையில் இருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருவள்ளூரில் இருக்கும் முகமது அலி தெருவில் வசித்து வந்தவர் வி. லதா(40). அவர் திருவள்ளூரைச் சேர்ந்த விஸ்வநாதன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி பல ஆண்டுகளாகியும் குழந்தை இல்லாததால் அவர்கள் கவலையில் இருந்தனர்.
இதையடுத்து மருத்துவரை அணுகிய லதா சோதனைக் குழாய் முறைப்படி ஸ்ரீநிதி என்ற பெண் குழந்தையை கடந்த 2013ம் ஆண்டில் பெற்றெடுத்தார். செயற்கை கருத்தரிப்புக்கு லதாவும், விஸ்வநாதனும் பலரிடம் ரூ.20 லட்சம் கடன் வாங்கினர். இந்நிலையில் விஸ்வநாதனுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு அவர் இறந்தார்.
அவர் இறந்த பிறகு இல்லத்தரசியான லதா கடனை அடைக்கவும், குழந்தையை வளர்க்கவும் கஷ்டப்பட்டார். கடனை அடைக்க முடியாததால் அவர் கடந்த திங்கட்கிழமை வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
குழந்தை ஸ்ரீநிதி தொடர்ந்து அழும் குரல் கேட்ட அக்கம்பக்கத்தினர் வந்து கதவை உடைத்து பார்த்தபோது லதா தூக்கில் பிணமாகத் தொங்கினார். தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் லதாவின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை முடிந்த பிறகு லதாவின் உடல் அவரது சகோதரர் அரசுவிடம் ஒப்படைக்கப்பட்டது. குழந்தையையும் போலீசார் அரசுவிடம் ஒப்படைத்தனர்.
கடன் வாங்கி பெற்ற குழந்தை பெற்றோர் இன்றி நிற்பதை பார்த்து அப்பகுதி மக்கள் கவலை அடைந்துள்ளனர்.