அரிவாளை தலைக்குக் கீழ் வைத்துத் தூங்கிய கணவர்.. ராத்திரியில் வெட்டிய மனைவி.. கள்ளக்காதல்
திருச்செந்தூர் அருகே தன்னை கொல்லத் திட்டமிட்டிருந்த கணவரை நள்ளிரவில் தீர்த்துக் கட்டினார் அவரது மனைவி.
திருச்செந்தூர்: தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் தன்னைக் கொல்லத் திட்டமிட்டிருந்த கணவரிடமிருந்து தன்னைக் காத்துக் கொள்ள அவருக்கு முந்தி மனைவி வெட்டிக் கொலை செய்த செயல் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
திருச்செந்தூர் அருகே உள்ளது நடுநாலுமூலைக்கிணறு புதுகாலனி. இப்பகுதியைச் சேர்ந்தவர் சங்கிலி மாடன். 36 வயதான இவர் ஒரு கூலித் தொழிலாளி. இவரது மனைவி பெயர் சாந்தி. இவர் அங்கன்வாடி மையத்தில் சமையலராக இருந்து வருகிறார். இவர்களுக்கு 16, 10, 8 வயதில் 3 மகன்கள் உள்ளனர்.
சாந்திக்கும், முடிசூடும் பெருமாள் என்பவருக்கும் இடையே கள்ளக்காதல் இருந்து வந்தது. இருவரும் அடிக்கடி சந்தித்து கலந்து வந்தனர். இது சங்கிலிமாடனுக்குத் தெரிய வந்தது. அவர் கோபமடைந்தார். மனைவியை கண்டித்துப் பார்த்தார். ஆனால் அவர் கள்ளத் தொடர்பை விடுவதாக இல்லை. இதனால் இருவருக்கும் இடையே சண்டை நடந்து வந்தது.
இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன்பு சங்கிலிமாடன் கொலை செய்யப்பட்டார். அவரைக் கொலை செய்தது சாந்திதான். போலீஸார் அவரைக் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையின்போது சாந்தி கொடுத்த பரபரப்பு வாக்குமூலம்:
எனக்கும் முடிசூடும்பெருமாள் என்பவருக்கும் தொடர்பு இருந்தது. கணவர் கண்டித்தார். இதனால் தகராறு ஏற்பட்டது. சம்பவத்தன்று இரவிலும் சங்கிலிமாடன் என்னிடம் கள்ளக்காதலை கைவிடுமாறு கூறினார். இதில் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது எனது கணவர் என்னை கொலை செய்துவிடுவேன் என மிரட்டினார். பின்னர் சிறிது நேரத்தில் அவர் தூங்கச் சென்று விட்டார்.
தூங்கப் போகும்போது தலையணைக்குக் கீழ் அவர் அரிவாளை பதுக்க வைத்ததைப் பார்த்து விட்டேன். என்னைக் கொல்லத்தான் அவர் வைத்ததாக நான் கருதினேன். எனவே இரவு முழுவதும் தூங்காமல் இருந்தேன். நள்ளிரவைத் தாண்டியதும், எழுந்து அந்த அரிவாளை எடுத்து கணவரை சரமாரியாக வெட்டித் தள்ளினேன். இதில் அவர் உயிரிழந்தார் என்றார் சாந்தி.