இப்படியும் ஒரு கொடூரக் கணவர்.. அடுத்தடுத்து 10 பிள்ளை பெற்ற பெண்.. 11வது பிரசவத்தில் பலி!
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் கணவர் குடும்ப கட்டுப்பாடு மறுத்ததால் அடுத்தடுத்து 10 குழந்தைகளுக்கு தாயான பெண் 11 ஆவது பிரசவத்தின் போது உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் அருகில் உள்ள தோட்டனூத்து வடக்கு தெருவை சேர்ந்தவர் மணிகண்டன். ஆட்டோ டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.
இவரது மனைவி சித்ரா. இவருக்கு 16 ஆவது வயதில் மணிகண்டனுடன் திருணம் நடந்தது.
10 குழந்தைகள்:
இவர்களுக்கு 4 மகன்கள், 6 மகள்கள் என மொத்தம் 10 குழந்தைகள் உள்ளனர்.
மீண்டும் கர்ப்பம்:
இந்நிலையில் 11 ஆவது முறையாக சித்ரா கர்ப்பமானார். ஆனால் கர்ப்பகாலத்தில் எடுக்க வேண்டிய மருத்துவ சிகிச்சைகள் மற்றும் சத்தான உணவுகள் எதுவும் உட்கொள்ளவில்லை.
வயிற்றில் இறந்த குழந்தை:
இதனால் குழந்தை வயிற்றிலேயே இறந்து விட்டது. இது தெரியாமல் சித்ரா வீட்டில் எப்போதும் போல் வேலை பார்த்து வந்தார்.
பிரசவ வலி என்று சந்தேகம்:
சம்பவத்தன்று அவருக்கு திடீரென வலி ஏற்பட்டது. பிரசவ வலி வந்துள்ளதாக நினைத்து அவரை திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
தாயும் பரிதாப பலி:
ஆனால் அவரை பரிசோதித்த டாக்டர்கள் வயிற்றில் குழந்தை இறந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் குழந்தை வெளிவந்தவுடன் தாயும் பரிதாபமாக உயிரிழந்தார்.
சம்மதிக்காத கணவர்:
சித்ரா குடும்ப கட்டுப்பாடு செய்ய தயாராக இருந்தபோதிலும் அவரது கணவர் இதற்கு சம்மதிக்கவில்லை.
கணவருக்காவது செய்திருக்கலாம்:
இது குறித்து முன்பே தெரிந்திருந்தால் மணிகண்டனுக்கு குடும்ப கட்டுப்பாடு செய்திருப்போம் என்று மருத்துவமனை ஊழியர்கள் தெரிவித்தனர்.
சோகத்தில் கிராம மக்கள்:
நாகரீகம் வளர்ந்த இந்த காலத்திலும் 35 வயதில் 10 குழந்தைகளை பெற்ற பெண் சரியான விழிப்புணர்வு இல்லாததால் பரிதாபமாக இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.